பஸ் ஸ்டாண்டில்.. பேசிட்டிருந்த ஜோடி.. சுற்றிலும் இருட்டு.. டக்குனு பார்த்தால் பக்கத்திலே 12 பேர்.. ஐயோ
17 வயது சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை கும்பல் ஒன்று தாக்கி உள்ளது
பெங்களூரு: 20 வயது இளைஞர் ஒருவரை, 12 பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளது.. அந்த இளைஞர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
அனைத்து சாதீய சங்கிலியையும் அறுத்தெறிய கூடிய வலிமை, கல்விக்கு ஒன்றே இருப்பதாக நாம் தொடர்ந்து நம்பிக் கொண்டு வருகிறோம்.. ஆனால், அந்த கல்வி நிலையங்களிலும் சாதியும், மதமும் நுழைந்து ஆட்டுவித்து வருவது அதிர்ச்சி கலந்த கவலையையே உண்டு பண்ணி வருகிறது.
இந்த கவலை, பாஜக ஆட்சி அமைந்தது முதலே நாட்டு மக்களுக்கு தொற்றிக் கொண்டுவிட்டது, இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருவது சிறுபான்மையின மக்கள் என்பது வேதனைக்குரிய விஷயம் என்று பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியும் வருகிறார்கள்..

ஸ்பீக்கர்கள்
மசூதியில் ஸ்பீக்கர்கள் முதல், மாட்டிறைச்சி விவகாரம், ஹிஜாப் வரை நடக்கும் நிகழ்வுகளையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இதில் கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட ஒரு குட்டி குஜராத் போலவே மாறி வருவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் சமீபத்தில்கூட, பெங்களூருவில், ஒரு முஸ்லிம் மாணவரை பார்த்து, தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியருக்கு எதிரான கண்டனங்கள் நாடு முழுவதும் வலுத்ததை நாம் கண்கூடாக பார்த்தோம்..

பஸ் ஸ்டாண்டு
இப்போதுகூட, ஒரு சம்பவம் நடந்து, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகாவில், கல்லுகுண்டி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ஹபீத்.. 20 வயதாகிறது.. இவருக்கும், வேறு மதத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஃபேஸ்புக்கில் ஒரு வருட காலத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இதன்மூலம் அவர்கள் 2 பேருமே நண்பர்களானார்கள்.. இந்த நிலையில், அந்த சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, ஹபீத் வந்திருந்தார்..

உருட்டுக்கட்டை
அவர்கள் 2 பேரும் பஸ் ஸ்டாண்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்... எப்போதுமே இந்த பஸ் ஸ்டாண்டில்தான் இருவரும் சந்தித்து பேசுவார்களாம்.. அன்றும் அப்படித்தான் சந்தித்துள்ளனர்.. தன் தோழிக்கு சாக்லேட்டையும் கொண்டு வந்து தந்திருந்தார் ஹபீத்.. அப்போது திடீரென 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஹபீத்தை நோக்கி வந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹபீத்தை கடத்திச் சென்றுவிட்டது.. அங்கே அருகில் இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு, ஹபீத்தை கொண்டு சென்று, உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியது... இதனால், வலி பொறுக்க முடியாமல் ஹபீத் கதறி துடித்தார்.. அவருக்கு தலை, கை, கால், உடம்பெல்லாம் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது..

சீரியஸ்
அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர், "இனிமேல் சிறுமியை சந்திக்க கூடாது, பேசக்கூடாது" என்று மிரட்டியதுடன், ஒரு பெரிய கத்தியை எடுத்து, ஹபீத்தை குத்த முயன்றுள்ளார்.. தற்போது, படுகாயங்களுடன் மருத்துவமனையில் ஹபீத் அனுமதிக்கப்பட்டுள்ளார்... தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது.. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சுப்ரமணிய போலீஸார், ஹபீத்தைத் தாக்கிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, தன்னுடைய மகளை ஹபீத் பலாத்காரம் செய்ய முயன்றதாக, அந்த 17 வயது சிறுமியின் அப்பா, போலீஸில் இன்னொரு புகார் தந்துள்ளார்..

டபுள் கேஸ்
அந்த புகாரில், "பஸ் ஸ்டாண்டில் என் மகள் நின்று கொண்டிருந்தாள்.. அப்போது, என் மகளிடம் ஹபீத், போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதற்கு என் மகள் தர மறுக்கவும், உடனே அவளை மிரட்டி, மானபங்கம் செய்ய முயன்றார்.. சம்பவம் நடந்து வீட்டுக்கு வந்தது முதல் தன் மகள் அதிர்ச்சியில் எதுவுமே பேசவில்லை என்றும் மறுநாள்தான் விஷயத்தை தங்களிடம் சொன்னதாகவும்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து ஹபீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. எனவே, போலீசாரின் விசாரணையை எதிர்நோக்கி அந்த மக்கள் உள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications