கோட்டையெல்லாம் அழிங்க.. பெங்களூர்ல சேர்த்துடுங்க.. சித்தராமையாவிடமே போன டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடகாவில் ராமநகர் மாவட்டத்துக்கு பதில் பெங்களூர் தெற்கு (Bangalore South District) என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. பெங்களூர் தெற்கு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் உள்பட மூத்த தலைவர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். துணை முதல்வர் பதவியோடு டிகே சிவக்குமார் கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

டிகே சிவக்குமார் காங்கிரஸ் மேலிடத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டவர். குறிப்பாக பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயன்ற குற்றச்சாட்டுகளின்போது அவர்களை டிகே சிவக்குமார் தனது கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தனது சொந்த மாவட்டத்தை பெங்களூருவுடன் இணைக்க முயன்று வருகிறார். அதாவது டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டம் என்பது ராமநகர் ஆகும். அங்குள்ள கனகபுரா தான் அவரது சொந்த ஊராகும். தற்போது டிகே சிவக்குமார் கனகபுரா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தான் உள்ளார்.

இந்த கனகபுராவை உள்ளடக்கிய ராமநகர் மாவட்டம் பெங்களூரையொட்டி அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் கனகபுரா உள்ளது. இந்த கனகபுரா கடந்த 2007 க்கு முன்பு பெங்களூர் புறநகர் மாவட்டத்தின் கீழ் இருந்தது. அதற்கு பிறகு 2007ல் ஜேடிஎஸ் சார்பில் முதல்வராக இருந்த எச்டி குமாரசாமி ராமநகர் மாவட்டத்தை உருவாக்கினார்.

அப்போது கனகபுரா, பெங்களூர் புறநகர் மாவட்டத்தில் இருந்து பிரித்து ராமநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தனது சொந்த ஊர் மற்றும் சொந்த மாவட்டத்தை பெங்களூருடன் இணைக்க வேண்டும் என்று அவர் செயல்பட்டு வந்தார். இதன் பின்னணியில் முக்கிய 2 காரணங்கள் உள்ளன. ஒன்று பெங்களூருவுடன் ராமநகர் மாவட்டத்தை சேர்ப்பதன் மூலம் அங்கு பிரபல ஐடி நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது. பெங்களூரில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் புறநகர் பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அமையும்போது அவரது சொந்த மாவட்ட மக்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் அங்குள்ள நிலத்தின் மதிப்பும் கிடுகிடுவென உயரும். இதனால் தான் ராமநகர் மாவட்டத்தை பெங்களூருடன் இணைக்க வேண்டும் என்பதில் அவர் அதிக ஆர்வத்துடன் உள்ளார்.

இத்தகைய சூழலில் தான் பெங்களூருவுடன் ராமநகர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் டிகே சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முதல்வர் சித்தராமையிடம் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். அந்த மனுவில், ‛‛ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு (Bangalore South) மாவட்டம் என்று மாற்றம் செய்ய வேண்டும். இந்த மாவட்டம் என்பது ராமநகர், சென்னப்பட்டனா, மாகடி, கனகபுரா, ஹாரோஹள்ளி தாலுகாக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும். மேலும் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் தலைநகராக ராமநகரை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications