துணை முதல்வரோடு முக்கிய 2 துறைகளை தட்டித்தூக்கும் டிகே சிவக்குமார்! எதெல்லாம் தெரியுமா? இதோ லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்த டிகே சிவக்குமார் இறுதியாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு முக்கிய 2 துறைகள் வழங்கப்பட உள்ளது. அந்த துறைகள் என்னென்ன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடித்தது. பாஜக 66, ஜேடிஎஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதையடுத்து தான் முதல்வர் பதவிக்கான ரேஸ் தொடங்கியது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.

டெல்லியில் கடந்த 2 நாட்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்காமல் பிடிவாதம் பிடித்தனர். குறிப்பாக சித்தராமையாவை முதல்வராக டிகே சிவக்குமார் ஏற்க முன்வரவில்லை. மேலும் அவரும் முதல்வர் பதவியை கேட்டு அடம்பிடித்தார்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக நேற்று நள்ளிரவில் கட்சி மேலிட தலைவர்கள் 2 பேரிடமும் பேசினார்கள். மேலும் டிகே சிவக்குமாரை சமாதானம் செய்ய தொடங்கினர். நேற்று இரவில் சோனியா காந்தி, டிகே சிவக்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசி சமாதானம் செய்தார். இதைடுத்து துணை முதல்வர் பதவியை ஏற்பதாக டிகே சிவக்குமார் ஒப்புக்கொண்டார். கொடுத்தால் முதல்வர் பதவியை மட்டும் தான் தர வேண்டும் என டிகே சிவக்குமார் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நேற்று டிகே சிவக்குமார் மனம்மாறினார்.
இதன் பின்னணியில் தான் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்று மின்சாரத்துறை. 2வது துறை நீர்ப்பாசனத்துறையாகும். கர்நாடகாவில் 2013-2018 முதல் டிகே சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டிகே சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் இந்த 2 துறையை அவர் நிர்வகிக்க வாய்ப்புள்ளது.

மேலும் அமைச்சரவையில் 33 பேர் அங்கம் வகிக்க உள்ளனர். இதில் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு சரிக்கு சமமாக அமைச்சர் பதவி வழங்குவதாகவும் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. அதோடு தற்போதைய சூழலில் சித்தராமையா முதல் 2 ஆண்டு முதல்வர் பதவியை நிர்வகிப்பார் எனவும், அதன்பிறகு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் மேலிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு துணை முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications