வாரிசை களமிறக்கும் டிகே சிவக்குமார்? அரசியலில் நுழைகிறாரா மகள் ஐஸ்வர்யா? அவரே தந்த விளக்கம்
பெங்களூர்: சிக்கல் வரும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாத்து அமித்ஷாவுக்கே ‛டஃப்' கொடுக்கும் டிகே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா அரசியலுக்கு வரலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் ஐஸ்வர்யா அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டிகே சிவக்குமார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

டிகே சிவக்குமார் முதல்வர் பதவிக்கு குறிவைத்தார். ஆனால் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. டிகே சிவக்குமார் தற்பாது கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார்.
தற்போதைய சூழலில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக டிகே சிவக்குமார் அறியப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிக்கல் வரும்போதெல்லாம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்து வழியனுப்புவது டிகே சிவக்குமார் தான். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலின்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அந்த எம்எல்ஏக்கள் டிகே சிவக்குமார் கட்டுப்பாட்டில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.
பாஜகவில் அரசியல் சாணக்கியராக மத்திய அமைச்சர் அமித்ஷாவை அந்த கட்சியினர் கூறி வரும் நிலையில் அவருக்கே டிகே சிவக்குமார் ‛டஃப்' கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் நேற்று முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் பெங்களூர் புறநகர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். பெங்களூர் புறநகர், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் சென்ட்ரல் உள்பட 14 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
டிகே சிவக்குமார் குடும்பத்தில் தற்போது டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும், அவரது தம்பி டிகே சுரேஷ் எம்பியாகவும் உள்ளார். இந்நிலையில் தான் விரைவில் டிகே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் ல் டிகே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா பெங்களூரில் ஓட்டளித்தார். அப்போது அவரிடம், ‛‛அரசியல் பிரவேசம்'' தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. தற்போது அவர் டிகே சிவக்குமாரின் கல்வி நிறுவனங்களை கவனித்து வரும் நிலையில் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு ஐஸ்வர்யா, ‛‛எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. நான் கல்வியாளராக உள்ளேன். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம். இதன்மூலம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தியாவை பெருமையடைய செய்ய ஒவ்வொருவரும் தனித்தனி துறைகளில் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. நான் எனக்கான துறையில் பணியாற்றி வருகிறேன். ஆனால் தேர்தலில் எனது சித்தப்பா டிகே சுரேஷ் போட்டியிட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவு உண்டு'' என்றார்.
இந்த வேளையில், ‛‛லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடிக்குமா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஜுன் 4ம் தேதி என் சித்தப்பா டிகே சுரேஷின் வெற்றியை கொண்டாடுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது'' என்றார்.
டிகே சிவக்குமாருக்கு மொத்தம் 2 மகள்கள். மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவருக்கு அமர்த்தியா ஹேக்டே என்பவருடன் திருமணம் நடந்தது. அமர்த்தியா ஹேக்டே யார் என்றால் மறைந்த கஃபே காஃபி டேவின் நிறுவனரான சித்தார்த்தின் மகன் ஆவார். மேலும் அமர்த்தியா ஹேக்டேவின் தாத்தா (அம்மா வழி தந்தை) தான் எஸ்எம் கிருஷ்ணா. இவர் கர்நாடகா முன்னாள் முதல்வராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். அதன்பிறகு அவர் ஆளுநராக இருந்தார். இந்த பதவிகளை எல்லாம் அவர் காங்கிரஸில் இருந்த அனுபவித்த நிலையில் தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார்.
இப்படி ஐஸ்வர்யாவின் குடும்பம் அரசியலுடன் தொடர்பில் உள்ளது. இதனால் தான் ஐஸ்வர்யா விரைவில் அரசியலுக்கு ‛என்ட்ரி' கொடுப்பார் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் அரசியலில் ஆர்வம் இல்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலை பொறுத்தமட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் டிகே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications