தினமும் தேசிய கீதம் இசைத்த பிறகுதான்.. கிச்சனில் அடுப்பு பற்ற வைப்பது ராமேஸ்வரம் கஃபே வழக்கமாம்!
பெங்களூர்: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில் அந்த உணவகம் குறித்து சுவாரஸ்யமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
சிலிண்டர் வெடித்ததா: இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். இது சிலிண்டர் வெடிப்பால் நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்த போதுதான் அது குண்டுவெடிப்பு என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் கிடைத்த தகவல்: சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு நபர் மாஸ்க் அணிந்து கொண்டு மப்ளர் போட்டபடியே பில்லிங் கவுன்ட்டரில் இருந்தார். அவர் ரவா இட்லியை ஆர்டர் செய்தார். ஆர்டரை கொடுத்துவிட்டு ஒரு கார்னரில் அமர்ந்திருந்தார். ரவா இட்லியும் வந்தது. அதை முழுவதுமாக சாப்பிட்டார். சுமார் 11.44 மணிக்கு வெடிகுண்டு இருக்கும் பையை உணவகத்தில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்.
வெடித்த குண்டு: மதியம் 12.55 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் கழித்துதான் குண்டு வெடித்தது. சுமார் 7 நிமிடங்கள் உணவகத்தில் இருந்த மர்மநபர் தனது பையை குப்பைத் தொட்டிக்கு அருகே வைத்துவிட்டு சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரின் முகத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ராமேஸ்வரம் கஃபே தொடர்பான தேடல்கள் என்பது இணையத்தில் நிறைய உள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரம் கஃபேயின் உரிமையாளர், ஒரு நாள் வருமானம் உள்ளிட்டவை தேடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் வெளியாகியுள்ளது.
தேசிய கீதம்: அதாவது ராமேஸ்வரம் கஃபேயில் தினந்தோறும் காலை அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு தேசிய கீதமான ஜன கண மன இசைத்த பிறகுதான் அனைத்து வேலைகளும் தொடங்குமாம். இந்த கஃபே 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அப்போது முதலே இதே நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து அந்த கஃபேயின் இணை நிறுவனர் ராகவேந்திர ராவிடம் கேட்ட போது அவர் கூறுகையில் எங்கள் உணவகத்தில் பலதரப்பட்ட மதங்களை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். எனவே ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு பிரார்த்தனை பாடல் என்பது சாத்தியமற்றது. மேலும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் கொண்ட ஒரே ஒரு பிரார்த்தனை பாடல் இல்லை. இதனால் தேசிய கீதத்தையே ஏன் நாம் பிரார்த்தனை பாடலாக பாடக் கூடாது என நினைத்துதான் அதை தினந்தோறும் இசைத்து வருகிறோம்.
700 ஊழியர்கள்: அந்த தேசிய கீதம் நமக்கு வேற்றுமையில் ஒற்றுமையை கற்றுக் கொடுக்கிறது. நாம் ஒரு குழுவாக எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறது. எங்கள் உணவகங்கள் ஜேபி நகர், இந்திரா நகர், ராஜாஜி நகர், ப்ரூகிஃபீல்டு ஆகியவற்றில் உள்ளன. இந்த 4 இடங்களையும் சேர்த்து 700 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருமே தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் கட்டாயம் பங்கேற்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications