பெங்களூர் 3 லோக்சபா தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 20 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 2ம் தேதி வெளியானது. மொத்தம் 295 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இன்று 2வது கட்டமாக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இதில் கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூரில் உள்ள 3 தொகுதிகள் உள்பட மொத்தம் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில் இன்னும் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பாக்கி உள்ளது.
இன்று வெளியான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பல மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: பெங்களூரில் மொத்தம் 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதன்படி பெங்களூர் தெற்கு தொகுதியில் சிட்டிங் எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் இளம் தலைவராக அறியப்படும் இவர் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக உள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர்.

பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாகும். 1996 முதல் 2014 வரை முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹேக்டே இங்கு தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றார். அவர் மறைந்த பிறகு 2019ல் தேஜஸ்வி சூர்யா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூர் மத்திய தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள பிசி மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பிசி மோகனுக்கு நான்காவது முறையாக பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் பெங்களூர் வடக்கு தொகுதியில் எம்பியாக உள்ள முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா அரசியலி்ல ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் உடுப்பி - சிக்கமகளூர் தொகுதி எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள சோபா கரந்தாலஜே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தொகுதி மாறி இந்த முறை பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மீண்டும் தார்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 2009, 2014, 2019 தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தற்போது எம்எல்ஏவாக உள்ள நிலையில் வரும் தேர்தலில் ஹாவேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும் சிட்டிங் எம்பியுமான ராகவேந்திராவுக்கு மீண்டும் சிவமொக்கா தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மைசூர் - குடகு தொகுதியில் மைசூர் மன்னர் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் ஸ்பிரே தாக்குதல் நடத்தியோருக்கு பாஸ் வழங்கிய குற்றச்சாட்டில் சிட்டிங் எம்பியான பிரதாப் சிம்ஹாவுக்கு மைசூர் - குடகு தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பல்லாரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, தாவணகெரோவில் காயத்ரி சித்தேஸ்வர், உடுப்பு சிக்கமகளூரில் கோட்டா சீனிவாஸ் பூஜாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தட்சின கன்னடா தொகுதி எம்பியும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான நளின் குமார் கட்டிலும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தொகுதியில் நளின் குமார் கட்டிலுக்கு பதில் பிரிஜ் சவ்தா என்பவர் போட்டியிடுகிறார். துமகூரு தொகுதியில் முன்னாள் அமைச்சர் வி சோமண்ணா, சாமராஜ் நகர் (தனி) தொகுதியில் பால்ஜராஜ், பெங்களூர் புறநகர் தொகுதியில் டாக்டர் மஞ்சுநாத் போட்டியிடுகிறார்.
அதேபோல் சிக்கோடி தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்பி அன்னாசாகேப் சங்கர் ஜோளே அறிவிக்கப்பட்டுள்ளார். பாகல்கோட்டை தொகுதிக்கு சிட்டிங் எம்பி கத்தி கவுடர், பிஜாப்பூர் (தனி) தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்பி ரமேஷ் ஜிகஜினகி, குல்பர்பா (தனி) தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்பி உமேஷ் ஜாதவ், பீதர் தொகுதிக்கு சிட்டிங் எம்பி பகவந்த் கூபா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர் அறிவிப்பின்படி பார்த்தால் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை காட்டிலும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கை தான் உயர்ந்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினரை விட எடியூரப்பா கைக்காட்டிய ஆட்களுக்கு தான் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எடியூரப்பா அரசியலில் ஓய்வு பெற்றாலும் கூட அவரது செல்வாக்கு இன்னும் குறையவில்லை. மேலும் அவர் சார்ந்த லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ள நிலையில் அவர் கூறியவர்களுக்கு தான் நிறைய தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications