முடிவுக்கு வரும் அன்லிமிடெட் டேட்டா.. இனி ஒவ்வொரு ஜிபிக்கும் காசு கட்டணம்? அதிர்ச்சி மாற்றம்!
டெல்லி: இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் அதிவேக 5G சேவைகளை இப்போது இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால், இந்த இலவச சேவை சீக்கிரமே முடிவுக்கு வரப் போகிறதாம். 5ஜி சேவையை இலவசமாக வழங்க வேண்டாம். அதற்குத் தனியாகக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரை டெலிகாம் நிறுவனங்களுக்குப் போய் இருக்கிறது.
தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள், தினசரி 2 ஜிபி அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றன. இருப்பினும், நாட்டில் 5ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

5ஜி டேட்டா
இதனால் இலவசமாக 5ஜி சேவையை வழங்குவதை நிறுத்திவிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று நிதிச் சந்தை ஆய்வு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் பரிந்துரைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்பொழுது 5ஜி சேவைக்கு மாறிவிட்டதால், அன்லிமிடெட் இலவச 5ஜி சேவையை நிறுத்திவிட்டுக் கூடுதல் டேட்டா பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை நிறுவனங்கள் கையாள வேண்டும் என்று மோதிலால் ஓஸ்வால் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது..
பாதிப்பு
வாடிக்கையாளர்கள் தங்களின் கூடுதல் டேட்டா தேவைகளுக்கு தற்பொழுது கூடுதல் ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோல முறையான கட்டணக் கட்டமைப்பு இல்லாதது வருவாய் வளர்ச்சியைப் பாதிப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் மொபைல் இணையப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மூன்று முக்கிய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ஒட்டுமொத்த டேட்டா, கடந்த நிதியாண்டின் 21.5 சதவீத வளர்ச்சி அடைந்த நிலையில், இந்தாண்டு 29 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 31 சதவீத வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் 28 சதவீத வளர்ச்சியையும், மூன்றாவது பெரிய நிறுவனமான வோடபோன் ஐடியா 23 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
அதிகரிப்பு
ஒரு வாடிக்கையாளரின் சராசரி மாதாந்திர டேட்டா நுகர்வு, 2025 நிதியாண்டில் 27.3 ஜிபியாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டில் 34.1 ஜிபியாக அதிகரித்துள்ளதாம். இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் ) நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியாவில் 5ஜி சேவையின் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்குள் 40.3 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது சுமார் 43.4 கோடி வாடிக்கையாளர்கள் தற்பொழுது அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். 2019ல் ஒரு நபரின் சராசரி டேட்டா பயன்பாடு வெறும் 6 முதல் 11 ஜிபியாக இருந்த நிலையில், தற்பொழுது அது 20 முதல் 66 ஜிபியாக அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
கட்டண முறையை மாற்ற வேண்டும்
மொபைல் தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டு வந்தாலும், தற்போதைய கட்டண முறையால் டெலிகாம் நிறுவனங்களால் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடிவதில்லையாம். இதனால் கட்டண உயர்வுக்குப் பதிலாக ஒருவர் எவ்வளவு டேட்டா யூஸ் செய்கிறாரோ அவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்ற முறைக்குப் போக வேண்டும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் பரிந்துரைக்கிறது. இப்படி கட்டணக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்தால் மட்டுமே நிலையான வளர்ச்சிக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நடந்த வளைகுடா போரால் ஏற்கனவே கேஸ் தொடங்கிப் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்திருந்தன. இதனால் இந்தாண்டு கட்டண உயர்வு வேண்டாம் என டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்திருந்தன. நிலைமை எல்லாம் சீராகி அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்த பிறகு, மீண்டும் புதிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.














Click it and Unblock the Notifications