Chennai: இவ்ளோ கிளீனா இருக்குது.. சென்னையை பார்த்து பிரமித்து போன வட இந்திய யூடியூபர்!
சென்னை: வடஇந்தியாவை சேர்ந்த 27 வயது யூடியூபர் ஒருவர், "நான் முதல் முறையாக தென்னிந்தியா வந்துள்ளேன். சென்னை வந்தவுடன் டெல்லியிலிருந்து இங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன்" என்று வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், சென்னை ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிகவும் சுத்தமாக இருப்பதாகவும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும், பொதுமக்கள் அமைதியுடன் நடந்து கொள்வது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வகிறது. பலரும் தென்னிந்திய நகரங்களின் தூய்மை, ஒழுங்கு மற்றும் பொது ஒழுக்கம் குறித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் இங்குள்ள விருந்தோம்பல், பாதுகாப்பு உணர்வை மெய்சிலிர்த்து தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. அதுபோன்ற வலைத்தள பதிவு ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது குறித்து பார்க்கலாம்.

டெல்லியை விட பல வித்தியாசம் இருக்கிறது
வட இந்திய மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் அவிஜித். இவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தனது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் சுற்றி வந்த இவர் மும்பையை தாண்டி வந்ததும் இல்லையாம். தென் மாநில நகரங்களுக்கு முதல் முறையாக வருகை தந்த அவிஜித், சென்னையை பார்த்து வாயடைத்து போயுள்ளதாக கூறியிருக்கிறார். தனது இன்ஸ்டாவில் அவிஜித் கூறியிருப்பதாவது:-
இப்போதுதான் சென்னையில் வந்து இறங்கினேன். டெல்லியை விட இங்கு பல வித்தியாசம் இருக்கிறது. அதை சொல்லியே ஆக வேண்டும். 27 வயது ஆனாலும் முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளேன். இதற்கு முன்பாக மும்பையை தாண்டி வந்தது இல்லை. எனவே இங்கு ஒவ்வொரு அனுபவமும் எனக்கு புதிதாக இருந்தது. அது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், வித்தியாசமானதாக இருந்தாலும் எல்லாமே புதிதாக இருக்கும்.
தன்னை மிகவும் கவர்ந்தது
சென்னையில் பொதுஇடங்களில் மக்களின் நடத்தைதான் முதலில் தன்னை மிகவும் கவர்ந்தது. நான் முதலில் கவனித்த விஷயம் என்னவென்றால், இங்குள்ள மக்கள் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்து கொள்கிறார்கள். அதிகமான கூட்டம் இருந்தாலும் கூட மக்கள் ரொம்ப அவசரப்படுவது இல்லை. அனைவரும் ரிலாக்ஸ் ஆகவும் மெதுவாகவும் நடந்து செல்கிறார்கள். நேற்று தான் நான் போபால் சென்று இருந்தேன். அதனுடன் ஒப்பிடும் போது சென்னை ரயில் நிலையம் உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக உள்ளது.
மற்றொரு விஷயம் என்னவென்றால், இங்குள்ள வாடகை கேப் டிரைவர்கள் நடந்து கொள்ளும் விஷயம்தான். கேப் டிரைவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருக்கிறார்கள். பயணிகளிடம் வாடகை கார் வேண்டுமா என்று ஒருமுறை கேட்கிறார்கள். அவர்கள் மறுத்தாலும் வாக்குவாதம் செய்வதோ தொடர்ந்து தொந்தரவோ செய்வது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து!
சென்னை வந்த பிறகு அவர் இட்லி மற்றும் மெது வடையை சாப்பிடும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். "சென்னையில் கழித்த முதல் ஒரு மணி நேர அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார். அவிஜித்தின் பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "நான் சென்னைக்கு முதல் முறையாக சென்ற போது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அந்த நகரம் கொடுத்தது. நல்ல உணவு, நல்ல உள்கட்டமைப்பு என அனைத்தும் சிறப்பாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சென்னையில் உங்களுக்கு மேலும் பல நல்ல அனுபவங்கள் கிடைக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.














Click it and Unblock the Notifications