முன்னாள் காதலியை கடத்தி தீர்த்து கட்ட திட்டம்.. காரிலேயே வெடிகுண்டு வெடித்ததால் பிளான் போட்ட இளைஞரே பலி
பெங்களூர்: காதலி தன்னை பிரிந்து சென்றதால் கோபமான இளைஞர் ஒருவர் அவரை காரில் கடத்தி கத்தியால் தாக்கினார். இதில் அந்த பெண் காரில் இருந்து இறங்கியதால் கோபமான இளைஞர் நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் அந்த இளைஞர் பலியானார். அவரது முன்னாள் காதலியும், டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஜோகிஹள்ளி கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது காரில் இளைஞர் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். மேலும் காருக்கு வெளியே பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்து கிடந்தனர்.
இதையடுத்து இறந்தவரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் காயமடைந்த பெண் மற்றும் ஆண் ஆகியோரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி கல்லம்பெல்லா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பலியான இளைஞர் தனது முன்னாள் காதலியை காரில் கடத்தி கத்தியால் குத்தியதும், நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதில் டிரைவரும், முன்னாள் காதலியும் தப்பிய நிலையில் நாட்டு வெடிகுண்டுடன் சதித்திட்டம் தீட்டிய இளைஞர் உடல் சிதறி இறந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: ''ஜோகிஹள்ளி கிராமத்தின் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். ஒருவரின் பெயர் பிரவீன். வயது 30. இன்னொருவரின் பெயர் ரம்யா. மற்றொருவர் டிரைவர் ஆவார். இவர்கள் பயணித்த கார் வாடகை கார். பெங்களூர் சித்தாபுராவில் இருந்து வாடகை காரில் பிரவீன், ரம்யாவுடன் புறப்பட்டார்.
பிரவீன் - ரம்யா ஆகியோர் முன்னாள் காதலர்கள். கருத்து வேறுபாட்டால் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். ஆனால் பிரவீன், ரம்யாவை விடவில்லை. செல்போனில் மெசேஜ் செய்து தொல்லை கொடுத்தார். இதனால் அவரது செல்போன் எண்ணை 'பிளாக்' செய்தார். இதில் கோபமான பிரவீன் எனக்கு கிடைக்காத ரம்யா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது. அவரை கொல்ல வேண்டும் என்று பிளான் போட்டார்.
அதன்படி பெங்களூர் ஜெயநகரில் ரம்யா வசிக்கும் இடத்துக்கு நேற்று காலையில் பிரவீன் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தன்னை பார்க்க வர வேண்டாம் என்று ரம்யா கூறினார். இதனால் கோபமான பிரவீன், ரம்யாவை மிரட்டி காரில் ஏற்றினார் 'ஊபர்' வாடகை கார் புக் செய்து அங்கிருந்து புறப்பட்டனர்.
கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டை பிரவீன் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். காரில் செல்லும் போதே ரம்யாவிடம் தகராறு செய்த பிரவீன் கத்தியால் அவரை தாக்கினார். இதனை பார்த்த டிரைவர் ஜோகிஹள்ளி அருகே காரை நிறுத்தினார். மேலும் காரின் கதவை திறந்து விட்டார். அப்போது ரம்யாவும், டிரைவரும் காரில் இருந்து பதற்றத்தோடு இறங்கினர். இதில் ஆத்திரமடைந்த பிரவீன் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் காருடன், பிரவீன் வெடித்து சிதறி உயிரிழந்தார். வெடிகுண்டு வெடிக்கும் முன்பே ரம்யா மற்றும் கார் டிரைவர் இறங்கியதால் காயத்துடன் தப்பினர்.
இந்த வழக்கில் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. அவை மர்மமுடிச்சுகளாக உள்ளன. அதனை கண்டுபிடிக்கும் வகையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications