அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.. முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக, போக்குவரத்து கழகங்கள் வாரியாக விரிவான அறிக்கைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் தற்போது மொத்தம் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஒட்டுமொத்தமாக 21,527 பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) தேர்தல் அறிக்கையில், "பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா இலவச பயணத் திட்டம் (வெற்றிப் பயணம் திட்டம்) செயல்படுத்தப்படும்" என்ற முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆலோசனை:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 16ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தனித்தனி அறிக்கை
அனைத்து வகையான பேருந்துகளிலும் (சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் உட்பட) இந்த திட்டத்தை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை அடுத்தே, தற்போது ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் தங்களுக்கு உட்பட்ட பேருந்துகள் மற்றும் நிதித் தேவைகள் குறித்த தனித்தனி அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் களமிறங்கியுள்ளன.
நிதிச்சுமை மற்றும் கூடுதல் நிதி தேவை:
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் சில முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளில் பயணிக்கும் ஒட்டுமொத்த பயணிகளில் சுமார் 62 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை பெண் பயணிகளே உள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட நகரப் பேருந்துகளுக்கான இலவச பயணத் திட்டத்திற்காக, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு தரப்பில் இருந்து மாதந்தோறும் சராசரியாக ₹16 கோடி நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை
இப்போது இத்திட்டத்தை எக்ஸ்பிரஸ் மற்றும் அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தும்போது, அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். மேலும், இத்திட்டத்தை தடையின்றி நடத்த போக்குவரத்து கழகங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் மானியத் தொகை எவ்வளவு? என்பது குறித்தும், இழப்பீடுகளை ஈடுசெய்ய வருவாயைப் பெருக்குவதற்கான மாற்று வழிகள் என்னென்ன? என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தற்போது மாவட்ட மற்றும் மண்டல வாரியாகத் தயாரிக்கப்பட்டு வரும் இந்த விரிவான புள்ளிவிவர அறிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை மற்றும் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இந்த 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கான முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பணிக்குச் செல்லும் மகளிர் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications