இப்போ வேண்டாம்.. அதிமுக மாஜிக்களுடன் மீட்டிங்கை ரத்து செய்த விஜய்.. கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பை தவெக தலைவர் முதல்வர் விஜய் திடீரென ரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் தவெக மற்றும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான நடராஜன், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, மற்றும் சம்பத் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இவர்களுடன் சேர்ந்து, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம், இசக்கி சுப்பையா, சத்யபாமா, மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் கட்சியில் இணைந்து சில காலம் ஆகியிருந்தும், தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேச இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால், தங்களது அரசியல் எதிர்காலம் மற்றும் கட்சியில் தங்களுக்கான முக்கியத்துவம் குறித்து விவாதிக்க விஜய்யை சந்திக்க அவர்கள் தீவிரமாக முயன்று வந்தனர்.
தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் மூலமாக, இந்த முன்னாள் அமைச்சர்கள் விஜய்யைச் சந்திக்கத் தொடர்ந்து அனுமதி கோரி வந்தனர். இவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, நேற்று (சனிக்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விஜய்யைச் சந்தித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வருகை தந்திருந்தனர். தமிழக அரசியலில் இந்த சந்திப்பு ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று இயக்குனர் பாக்யராஜ் காலமானார். திரைத்துறையில் தனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் மூத்த ஆளுமையான இயக்குனர் பாக்யராஜின் மறைவுச் செய்தி கேட்ட விஜய், மிகுந்த சோகத்திற்குள்ளானார். அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருந்ததாலும், திரைத்துறையின் இந்த துக்க நிகழ்வாலும், நேற்று திட்டமிடப்பட்டிருந்த அரசியல் சந்திப்புகள் அனைத்தையும் விஜய் அதிரடியாக ரத்து செய்தார்.
கடைசி நிமிடத்தில் இந்த முக்கியச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால், விஜய்யை நேரில் சந்தித்து பேசலாம் என்று மிகுந்த ஆவலோடும் எதிர்பார்ப்போடும் சென்னை வந்திருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும், இந்த சந்திப்பு தற்காலிகமாக மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த சில நாட்களில் மாற்றுத் தேதி ஒதுக்கப்பட்டு இந்தச் சந்திப்பு உறுதியாக நடக்கும் என்றும் தவெக தலைமை நிர்வாகிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவினர் பலரும் வரிசையாக கட்சியை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்து வருகிறார்கள். அவர்கள் பலரின் தேர்வாகி தவெகவே இப்போது உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சி விஜயபாஸ்கர் அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் விளங்கிய டாக்டர் சி.விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
இவர் விரைவில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளார். இவர் இணையும் நேரத்தில் மற்ற மாஜி அதிமுக தலைகளையும் விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications