“புரிதல் இல்லாதவர்.. உடனே மாத்துங்க!” தவெக கூட்டணியில் சலசலப்பு! விஜய்க்கு CPI வைத்த டிமாண்ட்!
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி நியமனம் தொடர்பாக, தவெக கூட்டணிக்குள் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் இந்த விஷயத்தை சீரியஸாக அணுகியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் டிமாண்ட் வைத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
முதலமைச்சர் விஜய்க்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகளும் விசிகவும் தொடர்ந்து பல்வேறு டிமாண்ட்களை வைத்திருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் தவெக இருந்தாலும், விஜய் எடுக்கும் முக்கிய முடிவுகளை திருத்த வைக்கும் வேலைகளை இடதுசாரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்தும் முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய டிமாண்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருக்கிறது.
சிபிஐ டிமாண்ட்
கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் விடுத்திருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் திரு வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
புரிதல் இல்லாதவர்
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்துகொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது." என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக எதிர்ப்பு
டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு, திமுகவும் அதிமுகவும் கூட கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?" என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்
அதிமுக எதிர்ப்பு
அதேபோல.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவி வரும் நிலையில், தமிழகத்தைச் சாராத.. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications