சென்னை வண்டலூர் அருகே கஞ்சா விற்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு.. போலீஸ் அதிரடி! என்ன நடந்தது?
சென்னை: சென்னை அருகே வண்டலூரை அடுத்த ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் காலில் காயமடைந்த ரவுடி செல்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவுடி செல்வாவுடன் இருந்த கனகராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்ட போலீசார்
செங்கல்பட்டு மாவட்ட வண்டலூரை அடுத்த ஓட்டேரி பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலையில் கரசங்கால் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேர் கையில் பையுடன் நின்றுகொண்டிருந்தனர். இதனால் அவர்களிடம் போலீசார் விசாரிக்க அருகே சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அவர்கள் இரண்டு பேரும் ஓட்டம் பிடித்தனர். இதனால் போலீசார் துரத்தி சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் போலீசாரை தாக்கிவிட்டு ஓடினார். கையில் இருந்த பையை பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது.
பிரபல ரவுடி செல்வா கைது
உடனடியாக காலில் காயமடைந்த நபரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல் காயமடைந்த போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தவர் பிரபல ரவுடி செல்வா என்ற செல்வகுமார் என்பது தெரியவந்தது. உடன் இருந்தவர் அவரது நண்பர் கனகராஜ் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையில் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த கஞ்சாவை யாரிடம் விற்பனை செய்ய அவர்கள் கொண்டு வந்தனர் என்றும், யாரிடம் இருந்து இவர்களுக்கு கஞ்சா கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் காலையிலேயே போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.














Click it and Unblock the Notifications