அமைச்சர் சரத்குமாருக்கு நெருக்கடி.. டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் திமுக!
சென்னை: பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நாளை திங்கட்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாகப் பரவியது. அமைச்சர் சரத்குமார் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து வெள்ளை நிறத்தில் ஒரு பொருளை பொடியாக்கிக் கொண்டிருப்பதை போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சரத்குமாரின் இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன். கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கு முன்பாக அத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை "Thug Life Moment" என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என திமுக தெரிவித்துள்ளது. திமுக மாணவரணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாணவரணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் தவெக அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.கவின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை "Thug Life Moment" என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், "பூமியில் இருக்குது மூணு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பதில் தப்பு ஒன்னும் இல்லடா" - "பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க" போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர்.
அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற "டாட்டூ"-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க மாணவரணி வலியுறுத்துகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications