சித்தராமையாவுடன் டிகே சிவகுமாருக்கு தொடரும் "அந்த கோபம்!" "முதுகில் குத்தமாட்டேன்" வார்த்தை பின்னணி!
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இருவரும் முதலமைச்சராக விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவகுமார் பதவிக்காக முதுகில் குத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும், இங்கிருந்த 17 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம் ஆனதால் ஆட்சி பாதியிலேயே கலைந்தது. பாஜக அதிகாரதை கைப்பற்றியது. அப்போதிலிருந்து கர்நாடகாவில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கடுமையாக உழைத்தது.

எதிர்பார்த்தபடி 2023ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி தன்பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற வாதம் தற்போது மேலெழுந்துள்ளது. அதாவது வழக்கமாக மாநிலத்தின் யார் கட்சியின் தலைவராக இருக்கிறார்களோ அவர்தான் அடுத்த முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இருக்கையில், டி.கே.சிவகுமார்தான் முதலமைச்சராக வேண்டும். ஏனெனில் கட்சி துவண்டு இருந்தபோது மாநில தலைவராக பொறுப்பேற்ற அவர் கட்சியை பழையபடி மீட்டெடுக்க கடுமையான முயற்சிகளை செய்திருக்கிறார்.
ஆனால் ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சராக இருந்த சித்தராமையா இவரை விட வயதிலும், அரசியலிலும் மூத்தவர். ஏறத்தாழ 9 முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். அதேபோல இதுதான் தன்னுடைய கடைசி அரசியல் பயணம் என்றும் இதன் பின்னர் எந்த பதவி பொறுப்பிலும் ஆசைப்பட போவதில்லை எனவும் கூறியுள்ளார். ஆகவே இந்த முறை முதலமைச்சராகிவிட வேண்டும் என்று கட்சியின் தேசிய தலைமையை வலியுறுத்தி வருகிறார். அவருக்கு எம்எல்ஏக்களிடம் பரவலான ஆதரவு இருக்கிறது. எனவே இவர்தான் அடுத்த முதலமைச்சராக வருவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ள இன்று தேசிய தலைமையுடன் டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்கிறார். முன்தாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காங்கிரஸ் என்பது தாய். நான் குழந்தை. தாய்க்கு தெரியும் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று. நான் முதலமைச்சர் பதவி கேட்டு யாரையும் மிரட்டவும் மாட்டேன், முதுகிலும் குத்த மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் சிவகுமாரும் ஆட்சியில் அமர வைக்கலாம் என காங்கிரஸ் கட்சி தலைமை யோசித்திருந்தது. ஆனால் இப்படி நடந்ததால் 2.5 ஆண்டுகளுக்கு பின்னர் சித்தராமையா தனது பதவியை விட்டுகொடுப்பாரா? என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சித்தராமையா தனக்கு 105 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறியுள்ளார். அதாவது இதற்கு முன்னர் கட்சி என்ன முடிவெடுத்தாலம் அதற்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறியிருந்த சித்தராமையா தற்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்று சிவகுமார் ஆதரவாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மட்டுமல்லாது சிவகுமார் "முதுகில் குத்தமாட்டேன்" என்று கூறியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவிய சம்பவத்திற்கு பின்னணியில் சித்தராமையா இருப்பதாக பேசப்பட்டது. எனவே இதனை நினைவுகூறும் விதமாக கூட அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தியது பிடிக்காமல், சித்தராமையாதான் பின்னணியில் இருந்து எம்எல்ஏக்கள் தாவிச் செல்ல உதவினார் என்று கூறப்பட்டது. எது எப்படியாயினும் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வரும் 18ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications