இதுதான் பாசம்.. 250 கிமீ தொலைவை கடந்து வளர்த்தவரை தேடிவந்த நாய்.. நெகிழ வைத்த சம்பவம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்திலிருந்து பாத யாத்திரையாக மகாராஷ்டிராவுக்கு சென்ற பக்தர்கள் குழுவுடன் நாய் ஒன்று சென்றிருக்கிறது. அங்கு நாய் தொலைந்துவிட்டதாக நினைத்து பக்தர்கள் குழு வீடு திரும்பி நிலையில், 250 கி.மீ-ஐ கடந்து நாய் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் யமர்கனி கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் கும்பர். இவர் ஆண்டுக்கு ஒரு முறை ஊர் மக்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூருக்கு பாத யாத்திரைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த ஜூன் மாதம் கமலேஷ் யாத்திரையை தொடங்கியுள்ளார். ஊர் மக்கள் அனைவரும் யாத்திரைக்கு செல்வதை பார்த்த அந்த ஊரை சேர்ந்த மகாராஜா எனும் நாயும் யாத்திரையில் பங்கேற்றிருக்கிறது.

போகும் வழியில் கமலேஷ் தங்கும் இடத்தில் மகாராஜாவும் தங்கியிருக்கிறது. அவர்கள் சாப்பிட்ட உணவில் கொஞ்சம் வழங்கியுள்ளனர். இப்படியாக சில நாட்கள் பயணித்து 250 கி.மீ தள்ளி உள்ள பந்தர்பூருக்கு ஊர் மக்களுடன் நாய் பந்தர்பூருக்கு சென்றிருக்கிறது. பந்தர்பூருக்கு சென்ற மக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். எல்லாம் முடிந்த பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் ஊரை சேர்ந்த மகாராஜா எனும் நாயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அக்கம் பக்கம் விசாரித்ததில், வேறு குழுவுடன் சென்று போய்விட்டதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய கமலேஷ் உள்ளிட்டோர் மகாராஜாவை அப்படியே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனால்.. அடுத்த நாள் கமலேஷின் வீட்டு வாசலில் மகாராஜா வாலாட்டியவாறு நின்றுக்கொண்டிருந்திருக்கிறது. இதை பார்த்த உள்ளூர் மக்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சுமார் 250 கி.மீ-ஐ கடந்து மகாராஜா எப்படி வந்து சேர்ந்தது என்றே தெரியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, “நாங்கள் ஆண்டுதோறும் இந்த யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். யாத்திரைக்கு தேவையான உணவு, உடை என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இந்த ஆண்டும் கிளம்பினோம். ஆனால் அதிசயமாக எங்கள் ஊர் நாய் மகாராஜா எங்களுடனேயே வந்தது. வழக்கமாக ஊர் எல்லை வரை வந்துவிட்டு அப்படியே சென்றுவிடும். ஆனால் இந்த முறை நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அங்கெல்லாம் வந்தது.
பந்தர்பூர் வரை வந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது. நாங்கள் எல்லா இடத்திலும் தேடி பார்த்தோம். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே, வேறு வழியின்றி அங்கிருந்து நாங்கள் கிளம்பிவிட்டோம். ஆனால் நாங்கள் ஊர் வந்து சேர்ந்த அடுத்த நாள், மகாராஜா எங்கள் ஊருக்கு வந்துவிட்டது. இது ஆச்சரியம். அந்த கடவுள்தான் மகாராஜாவை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.
அதேபோல மகாராஜாவுக்கு மாலை அணிவித்து கும்கும பொட்டு வைத்து ஊர் மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications