ஊட்டி கத்துக்கலாம்.. பெங்களூர் கையில் "தீம்.." சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சியில் அம்பேத்கர்
பெங்களூர்: பெங்களூரில் இந்த வருடம் நடைபெறும் சுதந்திர தின மலர் கண்காட்சியில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் சிலையின் மலர் மாதிரி ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரை தீமாக கையில் எடுத்த பெங்களூர் மலர் கண்காட்சி இம்முறை அம்பேத்கர் தீமுக்கு நகர்ந்துள்ளது. ஊட்டி மலர் கண்காட்சியும் கண்ணோடு, இப்படி கருத்து விருந்தும் வைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி பெங்களூர் லால்பாக்கில் மலர் கண்காட்சி நடைபெறும். தோட்டக்கலைத் துறையின் ஏற்பாட்டில் இந்த ஆண்டு சுதந்திர தின மலர் கண்காட்சி ஆகஸ்ட் 8 முதல் 19 வரை லால்பாக் தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாக வைத்து இந்த கருப்பொருள் அமையும்.

சமூக சீர்திருத்தவாதி பசவண்ணர் மற்றும் பல ஞானிகளை மையக்கருவாகக் கொண்டு 2024 குடியரசு தின மலர்க் கண்காட்சி நடைபெற்றது. அப்போது, 5.61 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தனர். டிக்கெட் விற்பனை வகையில், ₹2.58 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது தோட்டக் கலைத்துறை. ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மலர் மாதிரிகள், தகவல் பலகைகள் டாக்டர் அம்பேத்கரை சுற்றியே இருக்கும்.
"டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை அவரது முன்னோர்கள் மற்றும் பிறப்பு, குழந்தைப் பருவத்தில் சமூகத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், லண்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் அவரது கல்வி, சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, பிரிட்டிஷ் காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த காலம். நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவரது அனைத்து முக்கிய சாதனைகள் மலர் கண்காட்சியின் மையக் கருவாக இருக்கும்" என்று கர்நாடகாவின் தோட்டக்கலைத் துறையின் இணை இயக்குநர் (பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்) எம். ஜெகதீஷ் கூறினார்.
துறை அதிகாரிகளுடன் இணைந்து நிபுணர்கள் குழு நிகழ்ச்சிக்கான மையப்பகுதி மற்றும் பிற துணைக் கருப்பொருள்களை முடிவு செய்யும்.
"கண்ணாடி மாளிகையின் சுற்றளவில், சுமார் 100 பலகைகள் இருக்கும், அதில் டாக்டர். அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் அவரைப் பற்றிய உலகத் தலைவர்களின் மேற்கோள்களின் தொடர் காட்சிகள் இருக்கும்" என்று ஜெகதீஷ் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் பல்வேறு மலர் ஏற்பாடுகளுக்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் செடிகள் இடம்பெறும். மாதிரிகள் இறுதி செய்யப்பட்டவுடன் வெட்டப்பட்ட பூக்களின் அளவு தீர்மானிக்கப்படும்.
"நாங்கள் ஊட்டியில் இருந்து ரெட் ஹார்ட் போகர், பெட்டூனியாக்கள் மற்றும் பாயின்செட்டியா போன்ற மலர்களை வர வைக்கிறோம். டியூபரஸ் ரூட் பிகோனியா, இம்பேடியன்ஸ், ஆர்க்கிட்ஸ் மற்றும் ஆந்தூரியம் போன்ற பிற மலர்களையும் மாடல்களுக்குப் பயன்படுத்துவோம்," என்று ஜெகதீஷ் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெரியவர்களுக்கு வார நாட்களில் டிக்கெட் விலை ₹70 ஆகவும், வார இறுதி நாட்களில் ₹80 ஆகவும், குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் எல்லா நாட்களிலும் ₹30 ஆகவும் இருக்கும்.
சமூகத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை அழகிய மலர்க் காட்சிகள் மூலம் கொண்டாடும் அதே வேளையில் பார்வையாளர்களுக்கு ஈர்க்கும் அனுபவத்தை வழங்குவதில் எந்த குறையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications