தேர்தலுக்கு முன்.. தே. பின்.. கர்நாடகா சர்வே ரிசல்ட்டில் மிகப்பெரிய மாற்றம்.. இதை கவனிச்சீங்களா?
பெங்களூர் : தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் பெரிய அளவில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் மற்றும் பாஜக அளித்த வாக்குறுதிகள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன.
கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில், இன்று வாக்குப்பதிவு முடிந்ததுமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சியையே குறிப்பிட்டுள்ளன.

பெரிய அளவில் மாற்றம் : எனினும், சுவர்னா நியூஸ் - ஜன் கி பாத், போல்ஸ்ட்ராட், ராஜ்நீதி, நியூஸ் நேஷன் -சி.ஜி.எஸ் ஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. குறிப்பாக, பல்வேறு ப்ரீ போல் மற்றும் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரிகின்றன.
தேர்தல் பிரச்சாரம், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், பஜ்ரங்கள் தடை தொடர்பான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி ஆகியவை இந்த சர்வே முடிவில் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்.. பின் : ஜி நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 84 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இதுவே ஜி நியூஸ் மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 121 இடங்களையும் பாஜக 74 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாஜகவின் சீட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜன் கி பாத்.. தே.முன் - தே.பின் : ஜன் கி பாத் செய்தி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் பாஜக 106 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 98 இடங்களைக் கைப்பற்றும் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், தேர்தலுக்கு முன்பாக ஜன் கி பாத் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பாஜக 112 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீட்களை இழந்த காங்கிரஸ்: ஏபிபி நியூஸ் + சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி காங்கிரஸ் : 100-112 பாஜக : 89 ஜேடிஎஸ் : 25 மற்றவை : 4 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கணிப்பில் காங்கிரஸ் கட்சி 121 சீட், பாஜக 74 சீட், ஜேடிஎஸ் 29 சீட்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தற்போது கணிசமான சீட்களை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications