முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் இன்று கர்நாடகாவின் 25வது முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
இதற்கு முன்னதாக முதலமைச்சராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவராக டிகே சிவக்குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவர் முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

2023 சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் போதே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே இரண்டரை ஆண்டுகள் என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி, கடந்த மே 28ஆம் தேதி சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சித்தராமையாவே டிகே சிவக்குமாரை அடுத்த தலைவராக முன்மொழிந்தார். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலவிய உள்கட்சிப் பூசல் போல் இல்லாமல், கர்நாடகாவில் இந்த ஆட்சி மாற்றம் மிகவும் சுமூகமாக அரங்கேறியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.
8 முறை எம்.எல்.ஏ-வாக வென்று, 2020 முதல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக கட்சியை வழிநடத்தி வரும் டிகே சிவக்குமார், தனது அசாத்திய அரசியல் வியூகங்களுக்காக 'கனகபுரா பாண்டே' என்று அழைக்கப்படுபவர். மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள், சிறைவாசம் எனப் பல இக்கட்டான சூழல்களைக் கடந்து இன்று அம்மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரப் நாற்காலியில் அமருகிறார்.
சித்தராமையா அரசு கொண்டு வந்த இலவச மற்றும் மக்கள் நலத் திட்டங்களை எவ்வித தொய்வும் இன்றி தொடர்வதோடு, பெங்களூரு நகரக் கட்டமைப்பு மற்றும் மாநிலப் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது முதல் முன்னுரிமை என்று டி.கே.சிவக்குமார் தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications