4,000 ஆபாச வீடியோ.. பிரஜ்வல் ரேவண்ணாவின் 48 வயது பணிப்பெண் பலாத்கார வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனும், ஹாசன் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான் பண்ணை வீட்டில் வேலை செய்து வந்த 48 வயது பெண்ணை பலாத்காரம் செய்த புகார் தொடர்பான வழக்கில் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் சில விளக்கங்கள் தேவைப்பட்டதால் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இவரது இளைய மகன் குமாரசாமி. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான இவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். தேவகவுடாவின் மூத்த மகன் பெயர் எச்டி ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பியாவார். இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார புகார் எழுந்தது. இவர் தனது எம்பி பதவியை பயன்படுத்தியும், கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தியும் பெண்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 4,000 ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா கைது
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார புகார்கள் வழங்கப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை சிஐடிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பியபோது பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
4 பலாத்கார வழக்குகள்
பிரஜ்வல் ரேவண்ணா மீது மொத்தம் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 48 வயது பெண் சார்ந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்தது. அதாவது ஹாசன்மாவட்டம் கன்னிகடா பண்ணை வீட்டில் 48 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது அவரை மிரட்டி 2 முறை பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதுதொடர்பான வழக்கு பெங்களூர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் 1,632 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 113 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 48 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தது.
ஆனால் வழக்கு தொடர்பாக இருதரப்பினரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டி உள்ளது. இதனால் தீர்ப்பு இன்று வழங்கப்படவில்லை. தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தந்தை - தாய் மீது குற்றச்சாட்டு
மேலும் இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா, தாய் பவானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பெண்ணை ரேவண்ணா - பவானி ஆகியோரின் உத்தரவில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கேஆர் நகரில் உள்ள பண்ணை வீட்டில் அவரை சிஐடி போலீசார் மீட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications