கர்நாடகா முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொடூர படுகொலை- மனைவி உட்பட குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை!
பெங்களூர்: கர்நாடகா மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். ஓம் பிரகாஷ் வீட்டில ்ரத்த கறைகள் இருந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷின் சந்தேக மரணம் தொடர்பாக பெங்களூர் போலீசார், அவரது மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், 1981-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றினார். பெங்களூர் தென்கிழக்கில் ஹெச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று ஓம் பிரகாஷ் சடலமாக மீட்கபட்டார்.

இதனையடுத்து ஓம் பிரகாஷ் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஓம் பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்ட அறையில் ரத்த கறைகள் இருந்ததால் சந்தேக மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ஓம் பிர்காஷின் சடலம் மீட்கப்பட்ட போது வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூர் போலீசார் தரப்பில் கூறுகையில், முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் பல முறை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஓம் பிரகாஷ். அவரது உடலை ரத்த வெள்ளத்தில்தான் போலீசார் மீட்டனர். இந்த படுகொலை சம்பவம் இன்று மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது என்றனர்.
மேலும், ஓம் பிரகாஷின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் தற்போது கொலை வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளதாம். படுகொலை செய்யப்பட்ட ஓம் பிரகாஷின் மனைவி மற்றும் குடும்பத்தினர்தான் தற்போது போலீசாரின் சந்தேக வளையத்தில் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு தரப்பு, ஓம் பிர்காஷின் மனைவி மனநலன் பாதிப்பு சிக்கலை எதிர்கொண்டவர்; அதனால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் முன்னாள் டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சமவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பெங்களூர் கூடுதல் துணை கமிஷனர் விகாஷ் குமார் கூறுகையில், இன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மரணம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது மகனை நாங்கள் தொடர்பு கொண்டோம். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓம் பிரகாஷ் உடலில் இருந்து பெருமளவு ரத்தம் வெளியேறி இருந்தது. கூரிய ஆயுதம் ஒன்று பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது என்றார்.












Click it and Unblock the Notifications