கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் தேவகவுடா போட்டி- நாளை வேட்புமனுத் தாக்கல்: குமாரசாமி
பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் போட்டியிடுகிறார். தேவகவுடா நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார் என்று ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா ராஜ்யசபா எம்.பி.க்களான காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் கவுடா, பி.கே.ஹரி பிரசாத் பாஜகவின் பிரபாகர் கோரெ, ஜேடிஎஸ் கட்சியின் குபேந்திர ரெட்டி ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த 4 இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது.

பாஜக, காங்- அணிக்கு 2 எம்பிக்கள்
கர்நாடகா சட்டசபை எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜகவுக்கு 2 எம்.பி.க்களும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அணிக்கு 2 எம்.பி.க்களும் கிடைக்கும். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஜேடிஎஸ் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தரவும் முன்வந்தது.

ஜேடிஎஸ் வேட்பாளர் தேவகவுடா
காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவகவுடா நிறுத்தப்பட உள்ளார். தேவகவுடாதான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளதால் இதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தேவகவுடா நாளை மனு தாக்கல்
மேலும் தேவகவுடா நாளை ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமாரசாமி கூறியுள்ளார். 1994-96 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா எம்.பி. யாக இருந்தார் தேவகவுடா. அப்போது பிரதமராகவும் பதவி வகித்தார் தேவகவுடா. கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் தேவகவுடா.

பாஜக வேட்பாளர் யார்?
பாஜகவில் இன்னமும் வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கவில்லை. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மனைவி தேஜஸ்வினி, இன்ஃபோசிஸ் பவுண்டேசன் தலைவர் சுதா மூர்த்தி ஆகியோரது பெயர்கள் முதலில் அடிபட்டன. தற்போது இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications