அமைச்சராக்கினால் ஆட்சிக்கு முழு ஆதரவு தருகிறேன்.. குமாரசாமிக்கு நெருக்கடி தரும் சுயேச்சை எம்.எல்.ஏ
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்கு, முழு ஆதரவு கொடுப்பதாக சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் உறுதியளித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை கைப்பற்றி சாதித்துள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - மஜத கூட்டணி கலக்கமடைந்துள்ளது.

மத்தியில் மீண்டும் வலுவான ஆட்சியை பெற்றிருப்பதால், ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போதே ஏராளமான காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.
இதனால் பீதியடைந்துள்ள குமாரசாமி தரப்பு, ஆட்சியை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி தந்தால் ஆளும் கூட்டணி அரசை ஆதரிக்க தயாராக உள்ளதாக, முல்பாகல் தொகுதி எம்எல்ஏ-வான நாகேஷ், குமாரசாமி தரப்பிடம் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் - மதஜ கட்சிக்கு நாகேஷ் ஆதரவு கொடுத்தார். இதற்கு பலனாக அமைச்சர் பதவி தமக்கு கிடைக்கும் என நினைத்திருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை
இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, எம்எல்ஏ நாகேஷிடமும் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாகேஷை தனது வீட்டிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநில அமைச்சருமான டி.கே.சிவகுமார்.
பின்னர் அவரை குமாரசாமியிடம் அழைத்து சென்றார் அமைச்சர் சிவகுமார். குமாரசாமியை நேரில் சந்தித்த நாகேஷ், கடந்த ஆண்டு நெருக்கடியான நேரத்தில் தாமும், ராணிபென்னூர் சுயேச்சை எம்எல்ஏ சங்கரும் உங்கள் கூட்டணி அரசு அமைய ஆதரவளித்தோம். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்.
என்னை புறக்கணித்து விட்டீர்கள். ஒரே சமயத்தில் உங்களுக்கு ஆதரவளித்த ஒருவருக்கு அமைச்சர் பதவி, மற்றொருவருக்கு அது இல்லை என்றால் எப்படி என தனது மனகுமுறலை கொட்டியுள்ளார்.
அமைச்சர் பதவி எனக்கு அளிக்கும்பட்சத்தில், உங்கள் ஆட்சி தொடர முழு ஆதரவளிப்பேன் என குமாரசாமியிடம் நாகேஷ் நேரடியாகவே கூறியுள்ளார். இத்தகவலை பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதும் நாகேஷ் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications