"பள்ளி, கல்லூரிகளில் பகவத் கீதை, ராமாயணம் சொல்லி தருவோம்..!" மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதி
பெங்களூர்: பகவத் கீதையை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்தியக் கல்வித் துறை அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார். பகவத் கீதை மட்டுமின்றி ராமாயணம் மற்றும் மகாபாரதத்தையும் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஸ்ரீ பகவத் கீதா அபியான் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈஸ்வரப்பா, பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதையை பாடமாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

குமாரசாமி
அதை ஆமோதித்த குமாரசாமி, இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். பகவத் கீதையை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிச்சயம் ஆலோசிப்பேன் என குமாரசாமி உறுதியளித்துள்ளார்.
மேலும், பகவத் கீதை என்பது பள்ளி, கல்லூரி அளவில் மட்டுமின்றி, அனைத்துக் கல்வி நிலைகளிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் குமாரசாமி தெரிவித்தார். இந்த முக்கியமான விஷயத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பகவத் கீதை
இது தொடர்பாகக் குமாரசாமி மேலும் பேசுகையில், "ராமாயணம் மற்றும் மகாபாரதத்தையும் பள்ளி அளவில் கற்பிக்க வேண்டும்.. வாழ்வியல் விழுமியங்களின் அடித்தளமாகவும், இந்தியாவின் அடையாளமாகவும் இந்தக் காவியங்கள் உள்ளன. சமூகத்தை வழிநடத்தவும் வன்முறை மற்றும் அமைதியின்மையை நீக்கவும் இதை நாம் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தர வேண்டும். ஈஸ்வரப்பா சொன்னது போலவே பகவத் கீதையையும் சொல்லித் தர வேண்டும். இது தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சருடன் பேசி தேவையான முடிவை முடிவெடுப்பேன்.
சமீபத்தில் உடுப்பியில் நடந்த கூட்டத்தில் கூட பகவத் கீதை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் மூலம் நமது மதம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்த தெளிவான செய்தியை அவர் நாட்டு மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.. இது நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பாடம். எங்கள் குழந்தைப் பருவத்தில், பெரியவர்கள் வீட்டிலும், ஆசிரியர்கள் பள்ளிகளிலும் ராமாயணம், மகாபாரதக் கதைகளைச் சொல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது அத்தகைய நல்ல பழக்கம் மறைந்துவிட்டது.
ராமாயணம் & மகாபாரதம்
காலையில் எந்தவொரு செய்தி சேனலை போட்டாலும் நெகட்டிவான செய்திகளே வருகிறது. இதனால் சமூகத்தில் அமைதியின்மை உருவாகியுள்ளது. இதை மாற்ற பகவத் கீதையை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். ராமாயணம், மகாபாரதத்தையும் நாம் போதிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
பகவத் கீதையை கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டும் என்பதைப் பல்வேறு வலதுசாரி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்திய அமைச்சர் ஒருவரே அது தொடர்பாகப் பேசி முடிவெடுப்பேன் எனக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications