அதெப்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடலாம்? பாஜக போலவே பாயும் மாஜி முதல்வர் குமாரசாமி!
பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவு நீரை கர்நாடகா காங்கிரஸ் அரசு திறந்துவிட்டதே தவறு என கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநிலா முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான குமாரசாமி.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் வரை திறந்துவிடப்பட வேண்டிய எஞ்சிய நீர் அளவு 37 டிஎம்சி. ஆனால் இதனை கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவில்லை. 10 நாட்களுக்கு 10,000 கன அடிநீரை மட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறது.

இதனால் தமிழ்நாடு அரசு வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா அரசு மிகவும் சொற்பமான அளவு காவிரி நீரை திறந்துவிட்டது. இந்த சொற்ப நீரையும் இனி திறந்துவிடவே முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவு நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது கர்நாடகா மற்றொரு முன்னாள் முதல்வரான குமாரசாமியும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், தமிழ்நாடு பாசனப் பரப்பை ஆண்டுதோறும் விரிவாக்கம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட தேவை இல்லை. கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டது தவறு. உச்சநீதிமன்றம், காவிரி நீரை திறக்க உத்தரவு பிறப்பிக்காத நிலையில் கர்நாடகா அரசு ஏன் இப்படி செய்தது? தமிழ்நாடு அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு அலட்சியமாக இருந்து வருகிறது. கர்நாடகா அரசும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை உடனே முன்வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் ஆளும் காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications