பாலியல் தொல்லை..கடத்தல்! எகிறும் கிரைம் ரேட்..சிக்கலில் எச்டி.ரேவண்ணா! இன்று முன் ஜாமீன் மனு விசாரணை
பெங்களூரு: பாலியல் தொல்லை மற்றும் பெண் கடத்தல் புகாரில் உள்ள தேவகௌடாவின் மகன் எச்.டி. ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது
நாடாளுமன்ற மக்களவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் இரு கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக பாலியல் விவகாரம் முளைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியும் பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரிஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். அவரால் தான் தற்போது தேசிய அளவில் பாஜகவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலியல் விவகாரம்: ரேவண்ணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோக்கள் எடுத்து வைத்திருந்ததாகவும் அந்த வீடியோக்கள் தற்போது பரவி தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை எச்.டி..ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் பிரிஜ்வல் தலைமறைவாகி உள்ளார்.
பெண் கடத்தல்: இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை காவல்துறை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரேவண்ணாவும் அவரது மனைவியான பவானியின் ஆதரவாளர்களால் அந்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகவும் தனது தாயை மீட்டுத் தர வேண்டும் என கேஆர் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் புகார் அளித்தார். அந்த அடிப்படையில் ரேவண்ணா மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு: இந்த நிலையில் சிக்கலுக்கு மேல் சிக்கல் தொடர்ந்து வரும் நிலையில் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் 24 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும் ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் விசாரணை குழு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக பாலியல் தொல்லை வழக்கில் முன் ஜாமீன் கோரி எச்.டி.ரேவண்ணா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணா முன்ஜாமின் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜாமீன் பெரும் வகையில் ரேவண்ணா மீது வழக்குகள் பதியப்படவில்லை என போலீசார் கூறினர். இதனையடுத்து அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றார்.
முன் ஜாமீன் மனு: இந்த நிலையில் பெண் கடத்தல் புகாரில் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ரேவண்ணா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து அவர் முன் ஜாமின் கோரி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் அந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications