பூணூல் என்பது எப்படி நம்பிக்கையோ.. ஹிஜாப் அப்படித்தான்! பாயிண்ட் பாயிண்ட்டாக சொன்ன ஒவைசி.. கொதிப்பு!
பெங்களூர்: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

ஓவைசி எதிர்ப்பு
இதற்கு இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்தில்,
1. கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் கொடுத்த தீர்ப்பை நான் ஏற்க மாட்டேன். இது என் உரிமை. மனுதாரர்கள் மேல் முறையீடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
2. எங்கள் கட்சியினர் மட்டுமின்றி, மற்ற மதத்தினரும் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இது மாட்ச் ரீதியான, கலாச்சார, ரீதியாக வழங்கப்பட்டு இருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
3. ஒருவருக்கு தங்கள் நம்பிக்கையை, வழிபாட்டு உரிமையை வெளிப்படுத்தும் அதிகாரம் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு ஒருவரின் கருத்துரிமை, மத உரிமை, மத உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தடை செய்கிறது.

அடிப்படை உரிமை
4. அடிப்படை உரிமைகள் பற்றி விவரங்களை நாம் இப்போது ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு கடவுள் நம்பிக்கை கொண்ட நபருக்கு எல்லாமே அவசியமான அடிப்படை உரிமைதான். ஒரு இந்து பிராமணருக்கு எப்படி பூணூல் அடிப்படை மத உரிமைகளில் ஒன்றோ அப்படித்தான். இதில் நீதிபதிகள் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
5. ஒரு மாதத்தில் இருக்கும் இன்னொரு நபருக்கு கூட இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. இது ஒருவருக்கும், அவரின் கடவுளுக்கும் இடைப்பட்ட விஷயம். ஒருவரின் மத உரிமை இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அதில் அரசு தலையிட முடியும். ஹிஜாப் அப்படி ஒரு பாதிப்பை யாருக்கும் ஏற்படுத்தவில்லை.
6. ஹிஜாப் தடை மூலம் இஸ்லாமிய பெண்கள் படிப்பு பாதிக்கப்படும். இது அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து பாதிக்கும்.

ஹிஜாப் தடை
7. யூனிபார்ம் என்பது சமத்துவத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். அப்படி என்றால் வகுப்பில் யார் பணக்காரர் ஏழை என்று யாரும் தெரியாதா? பெயருக்கு பின் ஜாதி இருக்கிறதே அது பின்புலத்தை சொல்லிவிடாதா?
8. யூனிபார்ம் மூலம் ஒரு ஆசிரியர் வேறுபாட்டை காட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? உலகம் முழுக்க பள்ளிகள், போலீஸ், மற்றும் ராணுவத்தில் மத உரிமைகளுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
9. அயர்லாந்தில் போலீஸ் விதிகளில் மாற்றம் செய்தி ஹிஜாப் மற்றும் சீக்கியர்களின் டர்பன் அனுமதிக்கப்பட்டது. அதை மோடி அரசும் தீர்த்து வைத்தது. ஆனால் இப்போது ஹிஜாப்பை எதிர்க்கிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

பூணூல் அணிவது உரிமை
10. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? முதலில் இல்லாத விஷயத்தை வைத்து பிரச்சனை செய்தனர். மாணவிகள் ஹிஜாப், வளையல் எல்லாம் அணிந்து கொண்டு வகுப்பிற்கு சென்று கொண்டுதான் இருந்தனர். அதன்பின் இதை வைத்து கலவரம், போராட்டம், காவி துண்டு போராட்டங்களை ஏற்படுத்தினார்கள்.
11. காவி துண்டு என்பது அடிப்படை உரிமையா? அல்லது அது ஹிஜாப்பிற்கான எதிர்வினையா? அரசின் உத்தரவு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது? மீடியாவும், போலீசும், கல்லூரி நிர்வாகவும் ஹிஜாப் அணிந்த மாணவிகளை மோசமாக நடத்தியது. குழந்தைகளை கூட தேர்வு எழுத விடாமல் தடுத்தனர். இது சிவில் உரிமைகளில் மிகப்பெரிய அத்துமீறல்.
12. ஒரு மதத்தை டார்கெட் செய்கிறார்கள். ஒரு மத பழக்கத்தை வதை செய்கிறார்கள். இது சட்ட விதி 15க்கு எதிரானது. மாணவர்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது அல்லாவின் கட்டளைகளை தேர்வு செய்ய வேண்டுமா என்பதை மாணவிகள் தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து இருக்கிறது.
Recommended Video

அல்லா கட்டளை
13. அல்லாவின் கட்டளைப்படி மாணவிகள் தங்கள் உடை விதிகளையும் பின்பற்றி கல்வியை பெற வேண்டும். ஆனால் அரசு இப்போது இதில் மாணவிகள் ஏதாவது ஒன்றாக தேர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதுவரை நீதிமன்றங்கள் மசூதிகளையும், தாடி வைப்பதையும், இப்போது ஹிஜாப் அணிவதையும் மத உரிமை இல்லை என்று கூறியுள்ளது. அடுத்து என்ன பேச்சு உரிமைக்கு தடையா?
14. ஹிஜாப் அணியும் பெண்களை துன்புறுத்துவதை இந்த தீர்ப்பு ஆதரிக்காது என்று நம்புகிறேன். நாம் நம்பிக்கைதானே வைக்க முடியும்., வங்கிகள், மருத்துவமனைகள், பொது இடங்களில் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அது பார்த்து கடைசியில் வருத்தம்தான் ஏற்படும்.
15. முழு தீர்ப்பு வந்ததும் இதில் முழுமையாக கருத்து தெரிவிக்கப்படும். இப்போது நீதிமன்றம் கொடுத்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் இந்த கருத்துக்களை தெரிவித்து உள்ளேன் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications