கர்நாடகா: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு தந்த இந்துத்துவா குழு!
பெங்களூர்: இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் படுகொலையாளிகள் 2 பேருக்கு இந்துத்துவா குழுவைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுரி லங்கேஷ் கொலையாளிகள் 2 பேர் கடந்த 9-ந் தேதி ஜாமீனில் விடுதலையான போதுதான் இத்தகைய வரவேற்பு தரப்பட்டிருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கருத்துகளை மிக கடுமையாக விமர்சித்தவர் கவுரி லங்கேஷ். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி பெங்களூரில் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இந்தியாவை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கவுரி லங்கேஷ் படுகொலையில் இந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் கடந்த ஆண்டு கர்நாடகா அரசு அமைத்திருந்தது.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கில் கொலையாளிகள் அடுத்தடுத்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 9-ந் தேதியன்று கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இருந்து மேலும் பலர் ஜாமீனில் விடுதலையாகினர். சிறையில் இருந்து விடுதலையாகி விஜயபுரா வந்த கவுரி லங்கேஷ் கொலையாளிகள் 2 பேருக்கு காவி சால்வை போர்த்தி பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர் இந்துத்துவா குழுவினர். பின்னர் கொலையாளிகள் 2 பேரும் சிவாஜி சிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலை அணிவிக்கச் செய்தனர். மேலும் கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். 6 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையான கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு இந்துத்துவா குழுவினர் அளித்த இந்த வரவேற்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவுரி லங்கேஷ் கொலையாளி நவீன் குமாரின் தோளில் கைபோட்டு பாஜக முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா பேசும் படம் ஒன்றை கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications