கழுத்தின் ரத்த குழாயை வெட்டி எப்படி கொல்வது? கர்நாடகா மாஜி டிஜிபியை கொல்ல கூகுளில் தேடிய மனைவி
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் டிஜிபி ஓம்பிரகாசை அவரது மனைவி பல்லவி படுகொலை செய்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் இந்தியாவை அதிர வைத்துள்ள நிலையில் மனைவி பல்லவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை குறித்த நடுங்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் டிஜிபியாக பணியாற்றியவர் ஓம்பிரகாஷ். 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2017 ம் ஆண்டில் டிஜிபி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் பெங்களூரிலேயே செட்டில் ஆனார்.

மனைவி பல்லவி, மகள் கீர்த்தி ஆகியோருடன் அவர் பெங்களூர் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் கர்நாடகா மாஜி டிஜிபி ஓம்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அவரது மனைவி பல்லவி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து ஓம்பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓம்பிரகாஷின் மகன் கார்த்திகேஷ் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தாய் - தந்தைக்கு இடையே சொத்து விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. சகோதரியுடனும் இந்த விவகாரத்தில் பிரச்சனை இருந்தது என கூறினார்.
இதையடுத்து போலீசார் ஓம்பிரகாஷின் மனைவி பல்லவி மற்றும் மகள் கீர்த்தி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது கணவர் ஓம்பிரகாசை கொலை செய்ததை பல்லவி ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஓம்பிரகாஷ் வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். 2 வகையான மீன்கள் டேபிளில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு பின்னால் வந்த பல்லவி அவரை கத்தியால் குத்தி உள்ளார்.
ஓம்பிரகாஷின் மார்பு, வயிறு, தோள்பட்டை உள்பட 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. வயிற்று பகுதியில் 5 இடங்களில் கத்துக்குத்து ஆழமாக விழுந்துள்ளது. இதனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறி ஓம்பிரகாஷ் இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பல்லவியிடம் விசாரித்தபோது, சிறு பிரச்சனைக்கும் கூட ஓம்பிரகாஷ் துப்பாக்கியை எடுத்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு உறவினரிடம் வாட்ஸ்அப்பில் ‛அரக்கனை கொன்றுவிட்டேன்' என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தான் மாஜி டிஜிபி ஓம்பிரகாஷ் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஜி டிஜிபி ஓம்பிரகாசை கொல்வதற்கு முன்பு அவரது மனைவி பல்லவி கூகுளில் அதுபற்றி தேடி உள்ளார். கழுத்துக்கு செல்லும் ரத்த குழாய்களை வெட்டுவது எப்படி? அப்படி வெட்டுவதன் மூலம் ஒருவர் எப்படி இறப்பார்? என்பது பற்றி அவர் கூகுளில் தேடி உள்ளார். அதன்பிறகு தான் அவரை கொலை செய்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை தொடர்பாக தற்போது ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை போலீசார் கைது செய்துள்ளனர். மகள் கீர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீர்த்திக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications