திருடர்களை மாட்டிவிட்ட Apple Airpods.. கைவரிசை காட்டிய கும்பல் சிக்கியது எப்படி? சுவாரசிய பின்னணி
பெங்களூர்: பெங்களூர் அருகே வீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் திருடி சென்ற Airpods தான். ஏர்பாட்ஸ்-யை வைத்து திருடர்களின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் அருகே தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள டிபி நாராயணப்பா படாவனே பகுதியில் வசித்து வருபவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட திருடர்கள் அவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த ரூ.115 கிராம் தங்க நகைகள், சில்வர் நகைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், பணம் என்று மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
மறுநாள் ஊரில் இருந்து வீடு திரும்பியவர்கள் திருடுப்போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தொட்டபள்ளாப்புரா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து ஆப்பிள் Airpods-யை திருடர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த Airpods ஆக்டிவேட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதன் லோகேஷனை போலீசார் கண்டுபிடித்தனர். அது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அருகே உள்ள கூட்லு கேட் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கு மொத்தம் 3 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அரவ்கள் புருசோத்தம் (வயது 22), தர்ஷன் (20) மற்றும் சந்துரு (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தான் வீட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புகார் கொடுத்த 6 மணிநேரத்தில் போலீசார் 3 பேரையும் கைது செய்து பொருட்களை மீட்டனர். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் Airpods-ம் அதன்மூலம் கிடைத்த லொகேஷனும் தான் காரணம்.
மேலும் கைதான 3 பேரின் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது தாவணகெரே, உப்பள்ளி, துமகூரு, தெலுங்கானா மாநிலத்தின் சில இடங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதில் புருசோத்தம் தனது சிறுவயது முதலே திருட்டை அரங்கேற்றி வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தான் துமகூரு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கைவரிசை காட்டி சிக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications