பெங்களூரில் வீடு வாங்க போறீங்களா? "இந்த" ஒரு விஷயத்தை மறக்காதீங்க.. இல்லைனா பெரிய சிக்கலாகிடும்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஐடி ஊழியர்களே அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும்பலனோர் சொந்தமாக வீட்டையும் வாங்குகிறார்கள். இதற்கிடையே பெங்களூரில் சொந்தமாக வீடு வாங்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்... மிகச் சிறந்த இடத்தில் வீட்டை வாங்க என்ன செய்யலாம் என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் வசிக்கும் ஐடி ஊழியர்கள் சொந்தமாக வீட்டை வங்க ஆர்வம் காட்டுவார்கள். இருப்பினும், சரியான வீட்டைச் சரியான விலையில் கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இதற்கிடையே இது தொடர்பாக ரெட்டிட் தளத்தில் இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ள போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.

பெங்களூர் மழை
இது தொடர்பாக அவர், "பெங்களூர் மழை.. ரியல் எஸ்டேட்டிற்கு பக்காவான டெஸ்ட் இதுதான்.. நீங்கள் பெங்களூரில் வீடு வாங்க விரும்பினால் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் தந்த துண்டு சீட்டுகளை தூக்கித் தூரப்போடுங்கள். எங்கு வீடு வாங்கலாம் என்பதை முடிவெடுக்கும் முன்பு, அந்த பகுதிக்கு நேரில் ஒரு முறை மழைக் காலத்தில் போய் பாருங்கள்.
வெறும் போட்டோ மற்றும் பிளான்களை மட்டும் இணையத்தில் தேடாதீர்கள். எங்கே வடிகால் உள்ளது என்பதைத் தேடுங்கள். மழை எப்போதும் பொய் சொல்லாது. எங்கு மழை நீர் அதிகம் தேங்கி நிற்கிறது என்பதைப் பாருங்கள். அது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர் காமெடியான கருத்துகளைப் பதிவிட்டாலும், சிலர் உண்மையாகவே எங்கு நல்ல வீடுகளை வாங்க முடியும் என்பது குறித்த டிப்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.
பெரிய சிக்கில்
பெங்களூர் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் படாதபாடு படும்.. திட்டமிடப்படாத வேகமான நகரமயமாக்கல் காரணமாக நகரில் பல்வேறு பகுதிகளிலும் முறையான வடிகால் இல்லை. இதனால் மழை பெய்தால் பல இடங்களில் நீர் தேங்கிவிடும். இதன் காரணமாகவே வீடு வாங்கும் முன்பு, அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் ஒரு முறை செக் செய்யுமாறு அந்த நபர் ரெட்டிட் தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
சூப்பர் டிப்ஸ்
அதற்கு நெட்டிசன் ஒருவர், "பெல்லந்தூரின் பெரும்பகுதி, சர்ஜாபூர் சாலை, வர்தூர் ஆகியவற்றின் பெரும்பகுதி, ஐஐஎம் பெங்களூரின் தெற்கே உள்ள பகுதிகளையும் நிராகரித்துவிடலாம்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்த பகுதிகளில் கொஞ்சம் மழை பெய்தாலே வெள்ளம் தேங்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் இந்த போஸ்ட்டை பகிர்ந்துள்ளார்.
இதை மறக்கவே வேண்டாம்
இன்னொருவர் வேறு ஒரு தீர்வை முன்வைத்தார். அதாவது ஒரு ஏரியில் சொந்தமாக வீட்டை வாங்க விரும்பினால். முதலில் அந்த ஏரியாவில் சில மாதம் வாடைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்குங்கள்.. அப்போது தான் மழை நீர் எந்தளவுக்குத் தேங்குகிறது என்பது தெளிவாகத் தெரியும் என அவர் பதிவிட்டுள்ளார். இன்னு்ம சிலர், "நான் சோஷியல் மீடியாவில் எங்கெல்லாம் வெள்ளம் எனப் பார்க்கிறேனோ.. அதையெல்லாம் மேப்பில் மார்க் செய்து வைத்துக் கொள்வேன். பிறகு அந்த ஏரியாக்களை தவிர்த்து பிறகு பகுதிகளில் வீட்டைப் பார்ப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "முடிந்தால் பெங்களூரின் பழைய மேப்பை வாங்கி பாருங்கள்.. குறிப்பாக ஏரி உட்பட நீர்பிடிப்பு பகுதிகளின் விவரங்களை உள்ளடக்கிய மேப்பை வாங்கி பாருங்கள்.. ஏன் சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மீண்டும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது.. சில பகுதிகளில் பாதிப்பு இருப்பதில்லை என்பது உங்களுக்குப் புரியும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications