"கடைசி மூச்சு வரை.. உயிர் இருக்கும்வரை.. நான் பெருமைமிக்க கன்னடன்.." அதிர வைத்த அண்ணாமலை பேச்சு
பெங்களூர்: நான் பிறந்த இடம் வேறாக இருக்கலாம்.. ஆனால் கன்னடர் என்பதில் பெருமை கொள்கிறேன்.. கடைசி மூச்சு இருக்கும் வரை நான் கன்னடர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்த வீடியோ கன்னட மீடியாக்களில் வைரலாக சுற்றி வருகிறது.
Recommended Video
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் என்ற அந்தஸ்தில் பணியாற்றியபோது, தனது கடும் நடவடிக்கைகளால் அங்கு பெயர் பெற்றார்.
பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும், அண்ணாமலை பணியாற்றினார். இந்த நிலையில்தான். கடந்த ஆண்டு மே மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா
இவர் ராஜினாமா செய்தபோதே பெங்களூரில் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மட்டத்தில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அண்ணாமலை தனது சொந்த மாநிலமான தமிழகம் செல்ல உள்ளார்.. அங்கு அரசியலில் அவர் சேர உள்ளார்.. என்றெல்லாம் அவரது நட்பு வட்டாரங்கள் பேசியதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள். ஆனால் அண்ணாமலை அதை திட்டவட்டமாக மறுத்தார்.

தத்துவம் பேசினார்
மதுகர் ஷெட்டி என்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி உடல்நலக்குறைவால் 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அந்த அதிகாரியின் மரணம் தான், வாழ்க்கை என்றால் என்ன என்று தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், எனவே, ஐபிஎஸ் அதிகாரி பதவியை துறந்ததும், ஒரு தத்துவ ஞானி போல பேசினார் அண்ணாமலை. ஆனால் சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசியலில் தான் குதித்துள்ளார் அண்ணாமலை. எனவே ஓராண்டுக்கு முன்பு ஏன் அவர் ஒரு ஞானி போல பேசினார் என்பது தான் புரியவில்லை என்கிறார்கள் கர்நாடகாவில் உள்ள அவரது நட்பு வட்டங்கள்.

கன்னட மீடியாக்கள்
இந்த நிலையில்தான், தமிழகத்தை ஏதோ ஒரு மாநிலம் போலவும், கர்நாடகதான் தனது சொந்த மாநிலம் போலவும், அண்ணாமலை பேசிய பேச்சை கன்னட மீடியாக்கள் இன்று மறுபடி மறுபடி ஒளிபரப்புகின்றன. அண்ணாமலை பாஜக கட்சியில் சேரப்போவதாக கிடைத்த தகவலையடுத்து கன்னட மீடியாக்களில் இன்று காலை முதல், அவர் தன்னை கன்னடர் என்று அழைத்ததை போட்டு காட்டுகின்றன.

பாராட்டு விழா
ஏன் அப்படி பேசினார்? எங்கே வைத்து அப்படி பேசினார்? என்பதை நீங்களே பாருங்க. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிறகு, தெற்கு பெங்களூர் மண்டல காவல்துறை சார்பில் அண்ணாமலைக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில்தான் அண்ணாமலை இப்படிப் பேசியுள்ளார்.

சகோதரன்
அங்கு என்ன பேசினார்? நீங்களே பாருங்கள்.. எனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எனது மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்பதுபோன்ற நோக்கங்களுக்காகத்தான், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் எல்லோரும் எனது ரசிகர் என்று கூறினீர்கள். அப்படி சொல்ல வேண்டாம். நான் உங்களின் சகோதரன்.

தமிழகத்தில் கூட மரியாதை இருந்திருக்காது
நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடர். பிறந்தது வேறு பக்கம் இருக்கலாம் (விசில் சத்தம் அரங்கை அதிர வைக்கிறது) தமிழகத்திலிருந்து, நான் முதல் முறையாக கர்நாடகா வந்தபோது, தமிழ்நாட்டில் மிஞ்சிப் போனால் ஒரு 300 பேருக்கு என்னை பற்றி தெரிந்திருக்கும். அதுவும், பள்ளியில் படித்தவர்கள், கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள். அவ்வளவுதான். ஆனால், கர்நாடகா வந்தபிறகு எனது பணி திறமையை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். தமிழகத்தை சேர்ந்தவர் என்று நீங்கள் பார்க்கவில்லை.. காவிரி பிரச்சினை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை.. நீங்கள் என்னை தமிழனாக பார்க்கவில்லை.. அண்ணாமலை என்ற போலீஸ் அதிகாரியாகத்தான் பார்த்தீர்கள். எனது மாநிலத்தில் கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்திருப்பார்களா என்றால் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

உயிர் இருக்கும்வரை கன்னடன்
எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன். இவ்வாறு அண்ணாமலை உணர்ச்சிகரமாக பேசி உள்ளார். பதவியில் இருந்து கிளம்பி வரும்போது நன்றி தெரிவித்தோமா வந்தோமா என்று இல்லாமல், கடைசி மூச்சு இருக்கும் வரை.. உயிர் இருக்கும் வரை நான் கன்னடன் என்று அழுத்தம் திருத்தமாக கூறி விட்டு வந்துள்ளார் அண்ணாமலை. இவ்வாறு கூறி ஓராண்டுக்குள் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

யாருக்கு ஆதரவு?
கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே நிறைய விஷயங்களில் மோதல் இருக்கிறது. குறிப்பாக, காவிரிப் பிரச்சினை இருக்கிறது. ஒருவேளை, தமிழக பாஜக பொறுப்பில் அண்ணாமலை நியமிக்கப்பட்டால், காவிரி விவகாரங்களில் அவர் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடப்பாரா, தமிழகத்துக்கு ஆதரவாக நடப்பாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. உயிர் உள்ளவரை நான் கன்னடன் என்று கூறிவிட்டு வந்துள்ள அண்ணாமலை, தமிழகத்துக்கு ஆதரவாக எப்படி பேச முடியும்? இன்னமும் கர்நாடகாவில் அண்ணாமலை நட்பு வட்டங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.. அங்குள்ள அரசியல்வாதிகளும் இவருக்கு பழக்கம் உள்ளவர்கள். இப்படி எல்லாம் இருக்கும் போது, கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இவர் எப்படி எடுக்க முடியும் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை அவரது பேச்சு எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications