கமலுக்கு கெடு! நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் Thug Life வெளியாகாது: கர்நாடகா திரைப்பட சம்மேளனம்
பெங்களூர்: கன்னட மொழியின் தாய் தமிழ் என்று பேசிய நடிகர் கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் த ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகாது'' என்று கர்நாடகா திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு வார்னிங் செய்துள்ளார்.
‛நாயகன்' திரைப்படத்துக்கு பின் இயக்குநர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், நடிகர் சிலம்பரசன், திரிஷா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'.

இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது திரைப்படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் கமல்ஹாசன் உள்பட திரைப்பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் கமல்ஹாசன் பேசுகையில், ‛‛ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்'' என்றார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடகாவில் செயல்பட்டு வரும் கன்னட அமைப்பினர் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். முதல்வர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதனால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்புக்கு இடையே தான் கர்நாடகா திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அதுபற்றிய முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். இதுபற்றி நரசிம்மலு இன்று கூறியதாவது:தமிழை கன்னட மொழியின் தாய் என கூறுவதை ஏற்க முடியாது. கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்கமாட்டோம். கமல் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.கமல் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' படம் வெளியாகாது'' என்று வார்னிங் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications