தலித் சிறுவனை கட்டிவைத்து தோலை உரித்த பயங்கரம்.. கர்நாடகாவில்தான் அதிகரிக்கும் ஜாதி கொடுமை!
பெங்களூர்: இந்தியாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில் இந்த குற்றங்கள் 1.2% அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பட்டியலினத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை ஊர் மக்கள் கட்டி வைத்து தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடியரசுத் தலைவர்கள்
இந்தியாவின் முதன் முறையாக பழங்குடியின சமூகத்தை சேர்த்த பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான். ஆனால், நாட்டில் இந்த சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2020ஐ விட 2021ம் ஆண்டு இந்த குற்றங்களின் எண்ணிக்கை 1.2%ஆக அதிகரித்துள்ளது. இதை வெளிப்படையாக பார்த்தால் சிறிய அளவாக இருக்கலாம்.

வன்கொடுமை
ஆனால் இந்த புள்ளி விவரங்களை இப்படி பார்த்தால் அதன் வீரியத்தை நாம்மால் சரியாக உணர்ந்துகொள்ள முடியும். அதாவது கடந்த 2021ல் ஒவ்வொரு நாளும் 139 பட்டியலின மக்கள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 5 பேர் இந்த தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 14 வயது பட்டியலின சிறுவனை திருடன் எனக்கூறி ஊர் மக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

வீடியோ
இது தொடர்பான நெஞ்சை உறையவைக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள கெம்படனஹள்ளி கிராமத்தில் சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் திடீரென ஒன்று கூடிய ஊர் பொதுமக்கள் சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து துவைத்துள்ளனர்.

செருப்பால் தாக்குதல்
இது குறித்து விசாரிக்க வந்த தாயை செருப்பால் அடித்துள்ளனர். சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியின் காதணிகளை திருடிவிட்டதாக ஊர்மக்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுவனின் தாயார், "ஊர்க்காரர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தார்கள். எங்களின் சாதி குறித்து கேட்ட அவர்கள், நாங்கள் இந்த ஊரில் வசிக்கக்கூடாது என்றும், நாங்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக கூறினார்கள்" என கூறியுள்ளார்.

சிகிச்சை
கடந்த மாதம் 29ம் தேதியன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் இது குறித்து காவல்துறை தற்போது 10 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனையடுத்து தாயும், அவரது 14 வயது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்னர் கர்நாடகாவில் சாமி சிலையை தொட்டதற்காக தலித் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications