ஆபாச சைகை... விரிவுரையாளரை கல்லூரியில் கும்மி எடுத்த பெண் ஊழியர்கள்... கர்நாடகத்தில் பரபர சம்பவம்...
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெலகாவியில் தனியார் பியூ கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் பெண் விரிவுரையாளர்களுக்கு ஆபாச சைகை காட்டினார். இதையடுத்து பெண் விரிவுரையாளர்கள் ரவுண்ட் கட்டி கல்லூரியிலேயே அவரை கும்மி எடுத்தனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் தனியார் பியூ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அமித் பசவ மூர்த்தி என்பவர் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் ஏராளமான பெண்களும் விரிவுரையாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர் பெண் விரிவுரையாளர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் கல்லூரிக்கு வருகை
மேலும் மதுபானம் குடிக்கும் பழக்கம் கொண்ட அமித் பசவமூர்த்தி அடிக்கடி குடிபோதையில் கல்லூரிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பெண் விரிவுரையாளர்களிடம் தவறான சைகைகளை காண்பித்து, ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பெண் விரிவுரையாளர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெண் விரிவுரையாளர்கள் எச்சரிக்கை
இந்நிலையில் சம்பவத்தன்றும் அவர் மதுபோதையில் கல்லூரிக்கு வந்தார். பிறகு அவர் பெண் விரிவுரையாளர்களுக்கான அறைக்கு சென்று ஆபாச சைகை காண்பித்து ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண் விரிவுரையாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர் திருந்தவில்லை. தொடர்ந்து ஆபாசமான சைகைகளை காண்பித்துள்ளார்.

தாக்குதல்
இதனால் கோபமடைந்த பெண் விரிவுரையாளர்கள் அவரை ரவுண்ட் கட்டி தாக்கினர். மேலும் அறையில் இருந்து வெளியே அவரை இழுத்து வந்து செருப்பாலும் தாக்கினர். மேலும் அவருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தனர். இதையடுத்து கல்லூரியில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் வந்து அவரை மீட்டனர். மேலும் பெண் விரிவுரையாளர்களையும் சமாதானம் செய்தனர்.

போலீசில் புகார்
இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள் சம்பவம் குறித்து அவர்கள் பெலகாவி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் இதற்கிடையே அமித் பசவமூர்த்தியை பெண் விரிவரையாளர்கள் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications