மைசூர் தசரா விழாவில் இன்று ‛ஜம்பு சவாரி’.. 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானை
பெங்களூர்: உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. கடந்த 9 நாட்களாக கோலாகலமாக நடந்து வந்த மைசூர் தசரா விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இறுதி நாளான இன்று ‛ஜம்பு சவாரி' நடைபெற உள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமூண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அலங்கரிக்கப்பட்ட யானை சுமந்து மைசூரை சுற்றி வரும். அந்த யானையை தொடர்ந்து பல யானைகள் இன்று ஊர்வலமாக வர உள்ளது.
கர்நாடகாவின் மைசூரில் நடக்கும் தசரா திருவிழா உலக புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் இந்த தசரா விழா நடக்கும். மைசூரை ஆட்சி செய்த மன்னர் காலத்தில் இருந்தே கடந்த 414 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 415-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் மாதம் 22ம் தேதி தொடங்கியது. அரசு சார்பில் அமைக்கப்பட்ட தசரா கமிட்டியினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
நாளை காலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதனையடுத்து அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளி தேரில் எழுந்தருளுகிறார்.
கடந்த 22ம் தேதி காலையில் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. 'புக்கர்' விருது பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தசரா விழா தொடங்கியதும், தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் வரிசையாக தொடங்கி நடைபெற்று வந்தது. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை நடந்து வந்தது. மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
மைசூரு அரண்மனையில் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் டந்தன. தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் எம்.பி. தனியார் தர்பார் நடத்தி மக்களிடம் குறைகளை கேட்டார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி உள்ளது. இது விஜயதசமி தினமான இன்று நடக்க உள்ளது.
அதன்படி இன்று மதியம் மைசூரு அரண்மனையில் முன்பு கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி தூணுக்கு முதல்வர் சித்தராமையா பூஜை செய்வார். அதன்பிறகு அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடக்கும். மாலை 3 மணியளவில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும். மைசூர் அரண்மனை வளாகத்தில் வந்து பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் அலங்கார உடையில் இருக்கும். 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதனை ஒரு யானை சுமந்து செல்லும். அதன்பிறகு அந்த யானையை தொடர்ந்து பிற யானைகள் அணிவகுத்து ஊர்வலமாக செல்லும்.
கூட்டத்தில் யானைகள் மிரளாமல் இருக்க கடந்த சில வாரங்களாக யானைகள் மைசூர் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டு பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜம்பு சவாரியை காண கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். மைசூரு தசரா விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications