நோயாளிகள் இல்லை...இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா மையம் மூடப்படுகிறது!!
பெங்களூரு: பெங்களூருவில் சர்வதேச பொருட்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த நாட்டின் மிகப்பெரிய கொரோனா சிறப்பு மையம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. இங்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பெங்களூருவில் இருக்கும் சர்வதேச பொருட்காட்சி மையத்தில் ஒரே நேரத்தில் 10,000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்திற்கு கடந்த சில நாட்களாக நோயாளிகள் யாரும் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த மையத்தை மூடுவதற்கு கொரோனா கண்காணிப்பு அதிரடிப் படை பரிந்துரை செய்து இருந்ததாகவும், இதன் அடிப்படையில் மூடுவதற்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இங்கு கொண்டு வரப்பட்டு இருந்த பர்னிச்சர்கள், பெட்கள், ஃபேன், குப்பைத் தொட்டிகள், தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் ஆகியவை அரசு சார்ந்த ஹாஸ்டல்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சமூக நலத்துறைக்கு 2,500, தோட்டக்கலைத்துறை, சிறுபான்மை நலத்துறை, ஜிகேவிகே ஆகியவற்றுக்கு தலா 1000 பர்னிச்சர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் பர்னிச்சர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஹாஸ்டலுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த மையத்திற்கும், மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் ஊழல் நடந்து இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அரசு நேரடியான கொள்முதலில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications