சுற்றுலா-இன்ஸ்சூரன்ஸ்..புது ரூட்..கர்நாடகாவில் வாக்காளர்களை குளிர்விக்கும் அரசியல் கட்சி பிரமுகர்கள்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது, இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம் கட்டுவது, ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது என ஏகத்திற்கும் வாக்காளர்கள் மீது சலுகை மழைகளை கொட்டி வருகிறார்களாம் அரசியல் கட்சி பிரமுகர்கள்.
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடகத்திற்கு அடிக்கடி வந்து சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தல்
அதேபோல், காங்கிரஸ் கட்சியும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தேர்தல் பணிகளை மெல்ல மெல்ல துவங்கி விட்டது. கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகளையும் அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் தேர்தல் களத்தில் கடும் சவால் அளிக்கிறது. இதனால், கர்நாடகாவில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

வாக்காளர்களை கவர புது ரூட்
இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் தேர்தல் நடத்தை விதி அமலாகிவிடும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு பிறகு வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் எதையும் கொடுக்க முடியாது. அதேபோல்,வேட்பாளர்களின் செலவுகளையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணிக்கும். இதனால், தேர்தல் ஆணைய சட்ட நடவடிக்கைகளில் சிக்காமல் இருப்பதற்காக கர்நாடக சிட்டிங் எம்.எல்.ஏக்கள், தங்களுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கும் வேட்பாளர்கள் பலரும் தற்போது புது ரூட்டில் வாக்காளர்களை கவர தொடங்கிவிட்டார்களாம்.

சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது..
வாக்காளர்களுக்கு மது, புடவைகள், குக்கர்கள் என பல பொருட்களை வழங்கும் நிலை தற்போதும் இருந்தாலும் வேட்பாளர்கள் அடுத்த லெவலுக்கு முன்னேறியிருப்பதாக சொல்லப்படுகிறது. வாக்காளர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது, இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம் கட்டுவது, ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது என ஏகத்திற்கும் வாக்காளர்கள் மீது சலுகை மழைகளை கொட்டி வருகிறார்களாம். ஹூப்ளி தர்வார்டு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நகாரன் கவ்ரி, தான் பணியாற்றி வரும் கல்வி பயிற்சி மையத்தில், இலவசமாக ஐ.ஏ.எஸ் ,ஐபிஎஸ் பயிற்சிகளை அளித்து வருகிறாராம்.

சுய வேலை வாய்ப்பு குறித்த பயிற்சி
சமீபத்தில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு இந்த சலுகைகளை கொடுத்து தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என இப்போதே "துண்டு" போட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சில அரசியல்வாதிகள், வாக்காளர்களுக்கு லைப் இன்ஸ்சுரன்ஸ்க்கான பிரீமியத்தை செலுத்துகிறார்களாம். அதேபோல், ஹூப்ளி - தர்வாட் மேற்கு தொகுதியின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டும் தீபக் சின்சோர், தனக்கு சொந்தமான நிறுவனத்தில் பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு குறித்த பயிற்சியை இலவசமாக அளிக்கிறாராம்.

30 கோடி வரை..
இந்த பயிற்சியின் நிறைவில் பெண்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறார்களாம். இப்படி பல சலுகைகளை கொட்டி கொடுத்து வாக்குகளை பெறுவதில் தற்போதே வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கிவிட்டனர். சுமார் 2 லட்சம் வாக்குகள் கொண்ட ஒரு தொகுதிக்கு சுமார் 5 கோடி முதல் 30 கோடி வரை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications