தேர்தலில் தோற்ற அண்ணாமலை முன்பாக.. முன்னாள் முதல்வரான நான் நிற்கனுமா? விளாசிய ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: தமிழ்நாடு தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு தோற்ற நிலையில் அவர் பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பு தலைகுனிந்து இருக்கும்படியும், சிறுவன்போல் பின்வரிசையிலும் அமர வைக்கப்பட்டேன் எனக்கூறிய ஜெகதீஷ் ஷெட்டர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன. பாஜக சார்பில் சிட்டிங் எம்எல்ஏக்கள், பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்வு, வெற்றி வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் சீனியர்கள், சிட்டிங் எம்லெ்ஏக்களை பாஜக ஒதுக்கிவைத்துவிட்டு இளம் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. குஜராத்தில் இந்த தேர்தல் பார்மூலா கைக்கொடுத்த நிலையில் அதனை பாஜக மேலிடம் கர்நாடகாவிலும் அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் மூத்த தலைவரான இவர் தற்போது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 சட்டசபை தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து உடனடியாக காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து பாஜகவின் வேட்பாளராக மகேஷ் தென்கின்காய் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். உப்பள்ளியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர் தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையையும் விமர்சனம் செய்தார். இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
எனது முழுகுடும்பமும் அரசியலில் ஈடுபட்டது. உப்பள்ளியில் பாஜகவை பலப்படுத்த மொத்த குடும்பமும் செயல்பட்டு வந்தார். எனக்கு அதிகார தாகம் என்பது இல்லை. மாநில பாஜகவை சில நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை? என கேட்டபோது யாரும் எனக்கு பதில் அளிக்கவில்லை. இதுதான் எனக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் கட்சியில் இருந்து மூத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது.
எனக்கு பாஜகவில் போட்டியிட டிக்கெட் கிடைக்காமல் போக முக்கிய காரணம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான பிஎல் சந்தோஷ் தான். மகேஷ் தென்கின்காய்க்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக எனக்கு டிக்கெட் தரவிடாமல் தடுத்துள்ளார். மாநில பாஜகவில் என்ன நடக்கிறது? என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவது இல்லை. சில நபர்களால் மாநிலத்தில் பாஜக கட்சி நாசமாகி வருகிறது.
தார்வார் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி பதவிக்கு பிரகலாத் ஜோஷியின் பெயரை பரிந்துரை செய்தவன் நான். அவரது வெற்றிக்கு நான் உழைத்தேன். இப்போது அவரும் என்னை சரியாக நடத்தவில்லை. என்னை சிறுவன் போல் நடத்தினர். 7 முறை பாஜகவில் எம்எல்ஏவாகி இருந்து கட்சியை வளர்த்துள்ளேன். முதல்வராகவும் இருந்துள்ளேன்'' என்றார்.

இந்த வேளையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை மீதும் ஜெகதீஷ் ெஷட்டர் கோபத்தை வெளிப்படுத்தினார். இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர், ‛‛ கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்ட அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு சொந்தஊரான தமிழ்நாடு சென்றார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. ஒற்றை இலக்கத்தில் 4 முதல் 6 சீட்டுக்குள் பாஜக வெற்றி பெற்றது.
தற்போது கர்நாடகாவில் தேர்தலில் சீட் ஒதுக்கீடு நடவடிக்கைக்கும் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் முன்னாள் முதல்வரான நான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் முன் தலைக்குனிந்தபடி நிற்க வைக்கப்பட்டேன். சிறுவனாக அவருக்கு பின்வரிசையில் அமர வைக்கப்பட்டேன். இதெல்லாம் எதற்காக நடந்தது?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications