பெங்களூர் சிறையில் உல்லாசம்.. வெளியான வீடியோவால் சிக்கிய நடிகர் தர்ஷன்! பல்லாரி ஜெயிலுக்கு மாற்றம்
பெங்களூர்: நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ரசிகரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி கொன்ற வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் சலுகைகளை அனுபவித்தது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியான நிலையில் தர்ஷன் பெங்களூரில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்ஷன். இவர் முன்னணி நடிகராக வலம் வந்த அதேவேளையில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் நடிகர் தர்ஷன் தனது ரசிகரை ரேணுகா சுவாமியை கடத்தி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதாவது நடிகர் தர்ஷன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த பிரிவுக்கு நடிகையும், அவரது தோழியுமான பவித்ரா கவுடா தான் காரணம் என்று அவரது ரசிகர் ரேணுகா சுவாமி நினைத்தார். தர்ஷனும், பவித்ரா கவுடாவும் நெருங்கி பழகி வருவதால் இந்த சந்தேகம் அவருக்கு வந்தது. இதையடுத்து ரேணுகாசுவாமி, பவித்ரா கவுடாவுக்கு திட்டி ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார்.
இதையடுத்து பவித்ரா கவுடா, தர்ஷனிடம் புகாராக தெரிவித்து கண்கலங்கி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசுவாமியை கடத்தி பெங்களூர் கொண்டு வந்து சித்ரவதை கொன்று உடலை கால்வாயில் வீசினர். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த வழக்கில் தான் தர்ஷன் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் பெங்களூர் சிறையில் தர்ஷன் சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. தர்ஷன் கையில் டீ கப் மற்றும் சிகரெட்டுடன் தனது மேலாளரும், பெங்களூர் வில்சன் கார்டன் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் பெயர் உள்ள நாகராஜூ உள்பட சிலருடன் அமர்ந்து பேசும் போட்டோக்கள் வெளியானது. அதேபோல் சிறையில் இருந்து அவர் வீடியோ காலில் பேசும் காட்சிகளும் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது தர்ஷனுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து 9 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தலைமை சூப்பிரண்டு சேசு மூர்த்தி, உதவி சூப்பிரண்டு மல்லிகார்ஜூன சுவாமி, ஜெயிலர்களான சரண பசவா, பிரபு, உதவி ஜெயிலர்களான திப்பே சாமி, ஸ்ரீககாந்த் தால்வார், தலைமை வார்வடன்களான வெங்கப்பபா கோர்த்தி, சம்பத் குமார், பசப்பா டெலி உள்ளிட்டவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிதனி சிறையில் அடைக்க கர்நாடகா அரசு முடிவு செய்தது. அதன்படி நடிகர் தர்ஷன் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து பல்லாரி இண்டல்கா சிறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications