ஆயுதங்களை ரெடியா வெச்சுக்குங்க.. அட்லீஸ்ட் கத்தி.. கர்நாடகாவில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்!
பெங்களூர்: இந்துக்கள் ஆயுதங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் கத்தியையாவது தயாராக வைத்திருங்கள் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரக்யா சிங் தாக்கூர் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
பாஜக உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்கள், கட்சிகளில் பிரக்யா சிங் தாக்கூர் அதிரடியானவர். 2006-ம் ஆண்டு மாலேகான் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என கூறி சிறைவாசம் அனுபவித்தவர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றவர். பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியவர் பிரக்யா சிங் தாக்கூர்.

மகாத்மா காந்தியடிகளைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் தீவிர ஆதரவாளர் பிரக்யா சிங். கோட்சே குறித்து கூறிய பிரக்யா சிங்,
நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார்; தேச பக்தராக இருக்கிறார்; தேச பக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறுவோர் தங்களை சுயபரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்றார். பின்னர் இந்த கருத்துக்கு மன்னிப்பும் கேட்டார் அவர். அண்மையில் பதான் பட சர்ச்சையின் போது, காவி நிறத்தை எப்படி அவமதிக்கலாம்? பதான் படக் குழுவினர் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரக்யா சிங் தாக்கூர். கர்நாடகாவின் இந்துத்துவா அமைப்பான ஜாக்ரன வேதிகாவின் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரக்யா சிங், உலகை கடவுள் படைத்தார் என்பது சன்னியாசிகளின் கருத்து. லவ் ஜிஹாதிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பெண் குழந்தைகளுக்கு கலாசார மதிப்பு, விழுமியங்கள் குறித்து பாடம் நடத்துங்கள் என்றார்.
மேலும் கர்நாடகாவில் இந்துத்துவவாதிகள் கொல்லப்படுவது குறித்து பேசிய பிரக்யா சிங் தாக்கூர் நீங்கள் ஆயுதங்களை கூர்மையாக தயார்படுத்தி வைத்து கொள்ளுங்கள். உங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அத்துடன் உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்து கொள்ளவும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். குறைந்தபட்சம் கத்தியையாவடது வைத்துக் கொள்ளலாம். இந்த நாட்டில் எல்லோரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு என்றார்.

அதேபோல், வீடுகளில் பூஜைகளை நடத்துங்கள். தர்மம், சாஸ்திரங்கள் குறித்து படியுங்கள். இவற்றை குழந்தைகளுக்கும் கற்பிக்கவும். அப்போதுதான் நமது கலாசாரம், பண்பாட்டை நமது குழந்தைகள் கற்றுக் கொள்ளும் எனவும் பிரக்யாசிங் தாக்கூர் கூறினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு உட்கட்சி பூசலே பெரும் தலைவலியாக உள்ளது. அத்துடன் லிங்காயத்துகள் போராட்டம், எல்லை பிரச்சனை ஆகியவை பாஜகவுக்கு கடும் நெருகடியாக உள்ளது. இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக ஜனார்த்தன ரெட்டி தனிக் கட்சியையே தொடங்கிவிட்டார். இப்படியான சூழ்நிலையில் பிரக்யா சிங் தாக்கூரின் சர்ச்சை பேச்சு புதிய தலைவலியாகி விட்டது பாஜகவுக்கு.












Click it and Unblock the Notifications