“யோகி மாடலை” தொடங்கிய கர்நாடக அரசு.. ஆனால் சிறிய மாற்றம்! மாட்டிறைச்சி விற்றவருக்கு ஏற்பட்ட நிலை
பெங்களூரு: கர்நாடகாவில் மாட்டிறைச்சி விற்பனை செய்த நபரின் வீட்டுக்கு வழங்கப்பட்டுவந்த மின் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண்டித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவிலும் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி, மாட்டிறைச்சி என அடுத்தடுத்து மதம் சார்ந்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்கள், கலவரங்கள், கொலைகள் தொடர்கதையாகி இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, கர்நாடகாவில் உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் மாடலை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
ஹிந்தியை திணிக்க முயலும் பாஜக! அமித்ஷா நிகழ்ச்சி பேனரால் மீண்டும் புகையும் கர்நாடகா!கடும் எதிர்ப்பு!
பாஜக நிர்வாகி கொலை
இந்த நிலையில் கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.
எச்சரித்த கர்நாடக முதலமைச்சர்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மாவட்டமே வன்முறை களமாக மாறியது. இதன் தொடர்ச்சியாக பாஜகவிலிருந்து ஏராளமானோர் விலகுவதாக அறிவித்தனர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இதுபோன்ற நிலை கர்நாடகத்தில் தொடர்ந்தால், யோகியின் மாடலை கையில் எடுக்க வேண்டிய நிலை வரும்." என்றார்.
மாட்டிறைச்சி வியாபாரி
இந்த நிலையில் சிக்கமகளூரு பகுதியில் சபியுள்ளா என்ற நபர் வீட்டில் மாட்டிறைச்சியை விற்பனை செய்து வந்து இருக்கிறார். இதுகுறித்து நகராட்சித் தலைவருக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது. இதனை அடுத்து அதிகாரிகள் போலீசாருடன் சபியுல்லாவின் வீட்டுக்கு சென்றனர். இதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சபியுல்லா அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
யோகி மாடல் நடவடிக்கை
சபியுல்லாவின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் 100 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மாநில மின்வாரிய ஊழியர்களை அழைத்து சபியுல்லாவின் வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். தப்பிச்சென்ற மாட்டிறைச்சி வியாபாரி சபியுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.