அவங்க ஒரு இல்லத்தரசி.. அரசியலும் தெரியாது.. தொகுதியும் புரியாது.. அண்ணியை கலாய்த்த பாஜக வேட்பாளர்
பெங்களூர்: அவங்களெல்லாம் இல்லத்தரசி, அவங்களுக்கு அரசியல்ன்னா என்னனே தெரியாது என சொந்த அண்ணன் மனைவியையே பாஜக வேட்பாளர் கலாய்த்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது.

அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலை பொருத்தமட்டில் 38 ஆண்டுகளாக எந்த ஒரு ஆளும் கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நிச்சயம் சாதனையாகவே இருக்கும். ஆனால் இந்த சாதனையை அவர்கள் பெறக் கூடாது என்பதற்காக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
இந்த இரு தேசிய கட்சிகளுக்கு இடையே மாநில கட்சியான ஜேடியூ உள்ளது. நான் கிங் மேக்கர் இல்லை, நான்தான் கிங் என கூறி வருகிறார் முன்னாள் முதல்வர் குமாரசாமி. ஆனால் கள நிலவரத்தை பொருத்தமட்டில் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்று ஜேடியூ தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் தற்போது அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெல்லாரி தொகுதி பாஜக வேட்பாளர் சோமசேகர், வேட்பாளரும் தனது அண்ணியுமான அருணா லட்சுமியை கடுமையாக விமர்சித்துள்ளார். சோமசேகர் கூறுகையில் பெல்லாரி தொகுதியில் போட்டியிடும் கேஆர்பிபி (கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா) வேட்பாளர் லட்சுமி ஒரு இல்லத்தரசி.
அவருக்கு பெல்லாரி தொகுதி பற்றி ஒன்றுமே தெரியாது. இவ்வளவு ஏன் அரசியல் குறித்து கூட அவருக்கு ஒன்றுமே தெரியாது என சோமசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜனார்த்தன ரெட்டி சிறையிலிருந்து வெளியே வர நான்தான் உதவி செய்தேன். அவருக்காக நான் 63 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தேன். ஆனால் அவரோ தற்போது எனக்கு எதிராக அவருடைய மனைவியை தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.
வேட்பாளராக அறிவித்த பிறகுதான் அவர் வீதி வீதியாக வருகிறார். இல்லாவிட்டால் அவருக்கு எந்த பிரச்சினையும் தெரியாது. காங்கிரஸ் வேட்பாளர் பரத் ரெட்டிக்கும் தொகுதி நிலவரம் தெரியாது. 2008ஆம் ஆண்டு நான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டேன். இந்த தொகுதிக்காக நிறைய உழைத்துள்ளேன். எனது எண்ணம் என்ன தெரியுமா நான் சார்ந்த பகுதி, தொகுதி எல்லாம் வளர்ச்சியடைய வேண்டும் என சோமசேகர் தெரிவித்திருந்தார்.
கொழுந்தனுடைய கருத்து அருணா லட்சுமி பதில் அளிக்கையில் நான் ஜனார்த்தன ரெட்டியின் மனைவியாக போட்டியிடவில்லை. நான் எனது கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். நான் அவர் சொல்வது போல் வெறும் இல்லத்தரசி மட்டும் கிடையாது. இந்த கட்சியில் தொண்டராக சேர்ந்து சாமானிய மக்களின் குறைகளைத் தீர்த்து வருகிறேன் என்றார். பெல்லாரி என்பது ஜனார்த்தன ரெட்டியின் கோட்டையாகும். ஆனால் ஊழல் வழக்கில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டி பல்வேறு காரணங்களுக்காக பெல்லாரிக்கு வர தடை உள்ளது. அதனால் அவர் வேறு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் பெல்லாரியில் அருணா லட்சுமி போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications