விமலா கை நீட்டிவிட்டாராமே! சென்னையில் அலறிய அதிகாரி.. பெண் இன்ஸ்பெக்டர் தூக்கியடிக்கப்பட்ட பின்னணி?
சென்னை: சென்னையில் லஞ்சப் புகாரை விசாரிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே லஞ்சம் கேட்டு மிரட்டியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட டி.எஸ்.பி ஜாய் தயாள் அதிரடியாக ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வாரிசு சான்றிதழ், வீட்டுமனை அளவீடு, பட்டா மாற்றம், நெல் கொள்முதல் பில், சோலார் பேனர் பரிந்துரை மற்றும் புதிய மின் இணைப்பு போன்ற பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய 7 அதிகாரிகள் கைதாகி உள்ளனர்.

லஞ்சம் வாங்கி ஒரே வாரத்தில் 7 பேர் கைது
திருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், புதுக்கோட்டை சர்வேயர் செல்வராஜ், விழுப்புரம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, திண்டுக்கல் பில் கிளர்க் சுமன்ராஜ், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் சுப்பையா, கோவை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கதிர்வேல், சென்னை மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜமாலுதீன் ஆகிய 7 அரசு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொறி வைத்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
மேலும், இதே காலகட்டத்தில் நடந்து வந்த 3 ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனையும் அபராதமும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
சென்னை பெண் இன்ஸ்பெக்டர்
இந்நிலையில், மீண்டும் ஒரு அரசு அதிகாரி அசிங்கப்பட்டுள்ளார்.. சென்னையில் லஞ்சப் புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில், அவரே லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த டி.எஸ்.பி வேறு மாவட்டத்திற்கு அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகாரைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், விசாரிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் விமலா, சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரியிடமே கைநீட்டினாராம்.
இன்ஸ்பெக்டர் விமலா
தனக்கு தொகையை லஞ்சமாகக் கொடுத்தால் இந்த புகாரில் இருந்து உங்களைக் காப்பாற்றிவிடுகிறேன் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அந்த அதிகாரியை மிரட்டியிருக்கிறார்.
இன்ஸ்பெக்டரின் இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அந்த வருவாய் துறை அதிகாரி, தைரியமாக போலீஸ் உயர் அதிகாரிகளை அணுகி புகார் அளித்தார். காவல் துறையில் இருக்கும் கருப்பு ஆட்டை பிடிக்க, உடனடியாக ஐ.ஜி துரைகுமார் தலைமையில் ஒரு தனி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் விமலா வருவாய் துறை அதிகாரியை மிரட்டி லஞ்சம் கேட்டது அக்குவேறு ஆணிவேறாக நிரூபணமானது.
சஸ்பெண்ட் உத்தரவு
விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்தார். லஞ்சம் கேட்டு துறையின் பெயரைக் கெடுத்த இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இந்த லஞ்ச விவகாரத்தில் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாக டி.எஸ்.பி ஜாய் தயாள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவர் சென்னையில் இருந்து உடனடியாக ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச புகாரை விசாரிக்கச் சென்ற அதிகாரியே லஞ்சம் கேட்டு சஸ்பெண்ட் ஆன சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications