அணு அணுவாக சோதனை.. இன்று காலை முதல் தொடங்கும் நீட் தேர்வு மெகா ஒத்திகை.. 2.5 லட்சம் பேர் ரெடி
சென்னை: நீட் தேர்வு முறைகேடுகளால் ரத்து செய்யப்பட்ட மறு தேர்வு நாளை ஜூன் 21ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு எந்தவிதமான முறைகேடும் இல்லாமல், பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்ய, இன்று நாடு முழுவதும் பிரம்மாண்ட ஒத்திகை நடத்தப்படுகிறது. சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் 15,000 துணை ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.. இதில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடக்கும் தேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

நாளை நீட் மறுதேர்வு
நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை மறுதேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுதி உள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
இன்று நாடு முழுவதும் ஒத்திகை
இதையடுத்து இந்த முறை எந்த ஒரு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் NTA மிகத் தீவிரமாக இருக்கிறது. அதனால், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது இன்று ஜூன் 20ம் தேதி நாடு முழுவதும் ஒரு பிரம்மாண்ட ஒத்திகையை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஒத்திகை எப்படி நடக்கும்?
இன்று காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த ஒத்திகை, இரவு வரை நீடிக்கப் போகிறது. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எப்படிக் கொண்டு செல்வது, மாணவர்களுக்கு அதை எப்படி விநியோகிப்பது, தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை எப்படிப் பாதுகாப்பாகச் சேகரித்து எடுத்து வருவது என அத்தனை விஷயங்களையும் அன்று செய்து பார்க்கப் போகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், தேர்வு நாளன்று என்னென்ன நடக்குமோ, அதை ஒரு நாள் முன்பே முழுமையாகச் செய்து பார்த்துத் தயராகப் போகிறார்கள்.
இந்த ஒத்திகை சாதாரணமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. நாடு முழுவதும் நடக்கும் இந்தச் சோதனையில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், தேர்வு மையங்கள் அனைத்தும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் அணு அணுவாகக் கண்காணிக்கப்பட இருக்கின்றன.
அணு அணுவாக சோதனை
இந்த முறை பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த நினைத்த தேர்வு முகமை, ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. சுமார் 15,000 துணை ராணுவ வீரர்களிடம் வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வரும் வேலையையும் இந்தத் துணை ராணுவத்தினர் தான் செய்யப் போகிறார்கள்.
ஏற்கனவே முறைகேடுகளால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் இருந்த நிலையில், இந்த மறு தேர்வை மிக பாதுகாப்பாகவும், எந்த வித முறைகேடுகளும் இல்லாமலும் நடத்திக் காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் தேசிய தேர்வு முகமை இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications