கர்நாடகா தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் காங்.- கோலார் கனவில் சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று காங்கிரஸ் வெளியிடுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2-வது தொகுதியாக கோலார் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பதும் எதிர்பார்ப்பு.
கர்நாடகா சட்டசபையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போராடுகிறது. பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களில் 8 முறை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் எப்படியும் நம்ம ஆட்சிதான் என்பதில் காங்கிரஸ் மிகவும் நம்பிக்கையாக உள்ளது.
கர்நாடகா பாஜக அரசின் இடஒதுக்கீட்டு குழப்பங்கள், உட்கட்சி மோதல்கள் இவை அனைத்தும் அந்த கட்சியை வீழ்த்த போதுமான காரணங்கள் என நம்புகிறது காங்கிரஸ். அத்துடன் ஜாதிய அடிப்படையிலான கர்நாடகாவின் வாக்குகள் இம்முறை பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு. குறிப்பாக லிங்காயத் ஜாதி வாக்குகளின் முகமான, எடியூரப்பா தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதும் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் காங்கிரஸ் சாதகமான ஒன்றாகப் பார்க்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் எப்படியும் முதல்வர் பதவி கிடைத்துவிடும் என்ற கனவில் இருக்கிறது ஜேடிஎஸ்.
ஜேடிஎஸ் கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸும் 124 வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக வரும் 8-ந் தேதி வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தமது 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸில் முதல்வர் பதவி தமக்கே என இலவு காத்துகிடக்கும் சித்தராமையா ஏற்கனவே வருணா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் தாம் 2-வதாக கோலார் தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறேன் என அடம்பிடித்து வருகிறார். சித்தராமையாவின் இந்த வற்புறுத்தலுக்கு காங்கிரஸ் மேலிடம் க்ரீன் சிக்னல் தருமா? என்பது இன்றைய வேட்பாளர் பட்டியலில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications