விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ2.5லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம்.. கர்நாடகாவில் பிரதமர் மோடி
பெங்களூர்: நாட்டின் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை ரூ2.5 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு செலுத்தி இருப்பதாக கராடகா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசராத்தில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய பிரசார கூட்டத்துக்கு மக்கள் கூடிய கூட்டத்தால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் தலைவர்கள் தூக்கத்தை தொலைத்திருப்பார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு ஜேடிஎஸ், காங்கிரஸ் இரு கட்சிகளுமே மிகப் பெரும் முட்டுக்கட்டைகள். இந்த இரு கட்சிகளையும் வீழ்த்த வேண்டியது பொதுமக்கள் கடமை. காங்கிரஸ்- ஜேடிஎஸ் கட்சியின் ஊழல் அரசாங்கத்தில் இருந்து கர்நாடகாவை நாம் காப்பாற்ற வேண்டும்.

நிலையற்ற ஒரு அரசால் வளர்ச்சியைத் தந்துவிட முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தியா மீது உலகம் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததும், இந்தியாவின் இடம் உலக அளவில் உச்சத்தில் உள்ளது. மத்தியில் மாநிலத்திலும் ஆட்சி செய்கிற இரட்டை என்ஜின் அரசு முறைதான் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சிக் காலங்களில் வளர்ச்சி குறைந்து போனது.
காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் விவசாயிகளுக்காக எதுவும் செய்யப்படவில்லை. வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ் எதனையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மொத்தம் ரூ2.5 லட்சம் கோடியை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறது. காங்கிரஸ் எப்போதும் ஏழைகளைப் புறக்கணித்தே வந்துள்ளது. ஆனால் நாம் ஏழைகளின் மேம்பாட்டுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம்.
காங்கிரஸ் கட்சி 85% கமிஷன் பெற்றது. மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை கிடையாது. நான் ஒரு ரூபாய் அனுப்பினால் பொதுமக்களுக்கு 15 பைசாதான் கிடைக்கிறது என்று சொன்னது காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களில் ஒருவர்தான். காங்கிரஸ் கட்சி அத்தனையிலும் அரசியல் செய்கிறது. ஆனால் பாஜக மகிழ்ச்சிப்படுத்துகிற அரசியலை செய்வதே இல்லை. ஊழலின் பிடியில் சிக்கி இருக்கிறது காங்கிரஸ். ஆனால் பாஜகவோ ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய கட்சி.

காங்கிரஸின் சகாப்தம் முடிந்து போய்விட்ட ஒன்று. காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசக் கூடும். ஆனால் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்றாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடிய கட்சி காங்கிரஸ். ஆனால் பாஜகவோ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியது என்பதை கர்நாடகா வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் என்னை வெறுக்கக் கூடியது. ஏனெனில் ஊழக்கு எதிராக போராடக் கூடியவன் நான். அதனால்தான் எனக்கு காங்கிரஸ் கட்சி மிரட்டல் விடுக்கிறது.. அவதூறு பரப்புகிறது. இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் என்னை விஷப்பாம்பு என்கிறது காங்கிரஸ். இதற்கு எல்லாம் கர்நாடகா மாநில மக்கள் மே 10-ந் தேதி தக்க பதிலடி தருவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications