வெல்வது யார்? கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்தது.. மொத்தம் 72.67% ஓட்டுப்பதிவு.. மே 13ல் ரிசல்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் களத்தில் 2,615 வேட்பாளர்கள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Recommended Video
கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 2018 ல் தேர்தல் நடந்தது. இந்த சட்டசபையின் 5 ஆண்டு காலம் மே 24ஆம் தேதி முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மே 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இங்கு ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலையொட்டி ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 33 ஆயிரத்து 054 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 43 லட்சத்து 48 ஆயிரத்து 028 பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள்.
இதில் பாஜக சார்பில் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ், ஆம்ஆத்மி சார்பில் 209 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். கர்நாடகா ராஷ்ட்ர சமிதி சார்பில் 195 வேட்பர்கள், பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்கள், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 9 வேட்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 வேட்பாளர்கள் உள்பட மேலும் சில கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2,430 பேர் ஆண்களும், 184 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும், ஜேடிஎஸ் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியிலும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஏராளமான தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஜேடிஎஸ் கட்சிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஓட்டு சேகரித்தார். தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதையடுத்து இன்று ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன. இந்த தேர்தலுக்காக மொத்தம் 37,777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து நீண்டவரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. மதியம் 3 மணி நிலவரப்படி 52 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 65.69% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இறுதியில் மொத்தமாக 72.67 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக மாநிலத்தில் 80 வயது நிரம்பியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மே 6 வரை வீட்டில் இருந்தே முதியவர்கள் வாக்களித்தனர். அதன்படி 76,000 முதியவர்கள், 18,800 மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டு போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் நேற்று தங்களின் தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவரும். இருப்பினும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சமீபத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் இந்த கருத்து கணிப்பை நடத்தின. இந்த கருத்து கணிப்பில் சில காங்கிரஸ் கட்சிக்கும், சில பாஜகவுக்கும் ஆதரவாக இருந்தன.
மேலும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி என்பது கிடைக்காது, இதனால் ஜேடிஎஸ் கட்சி ஆதரவு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாறக்கூடும் என தெரிவித்து இருந்தது. இருப்பினும் கூட கர்நாடகா மக்களின் முடிவு என்ன? என்பதை அறிய நாம் மே 13ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications