பாஜகவுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் டேமேஜ்! பேரணி பிளானோடு வந்த தாமரைகள்! கர்நாடகாவில் தேர்தல் ஜுரம்
பாஜகவுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் டேமேஜ்! கர்நாடகா தேர்தலுக்கு கை கொடுக்குமா இன்றைய பேரணி?
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்துகிற பிரம்மாண்ட பேரணி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
224 எம்.எல்.ஏ. இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 104; காங்கிரஸ் 80; ஜேடிஎஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றன. பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏக்கள் தேவை என்பதால் தொங்கு சட்டசபைதான் உருவானது. பின்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார்.

குமாரசாமி அரசு
ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஓராண்டை கடந்த நிலையில் திடீரென இரு கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்கள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். தங்களது எம்.எல்.ஏ. பதவிகளைர் ராஜினாமா செய்ததால் முதல்வர் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் முதல்வர் குமாரசாமி. இருந்தபோதும் சட்டசபையில் பெரும்பான்மையை குமாரசாமி அரசு நிரூபிக்கவில்லை; அதனால் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக ஆட்சி
இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அமைத்தது. கர்நாடகா முதல்வராக 2 ஆண்டுகள் எடியூரப்பா பதவி வகித்தார். ஓராண்டுக்கு முன்ன எடியூரப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு பசவராஜ் பொம்மை புதிய முதல்வரானார். கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வெல்வது என்ற முனைப்பில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தீவிரம் காட்டுகின்றன.

நெருக்கடியில் பாஜக
கர்நாடகா ஆளும் பாஜகவுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்துத்துவ அமைப்பினர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டு வருவதால் இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள், பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இன்னொரு பக்கம், இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சிறைகளில் உல்லாச வசதிகள் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான ஹிஜாப் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாஜகவுக்கு சவாலானவை. லிங்காயத் மடாதிபதி மீதான நடவடிக்கை உள்ளிட்டவைகளில் கத்தி மேல்தான் பாஜக நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்கம், இயல்பாகவே கர்நாடகா பாஜகவில் எப்போதும் கொடிகட்டிப் பறக்கும் உட்கட்சி மோதல் அக்கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

பாஜக பேரணி
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவு- பசவராஜ் பொம்மை முதல்வராகி ஓராண்டு நிறைவு ஆகியவற்றை முன்வைத்து இன்று பாஜக பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுவே பாஜகவின் சட்டசபை தேர்தல் பிரசாரமாகவும் பார்க்கப்படுகிறது. இன்றைய பாஜகவின் பேரணி கை கொடுக்குமா? கை கலக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications