கர்நாடகாவில் தொங்கு சட்டசபையா? ஜேடிஎஸ் கிங் மேக்கரா? நோ சான்ஸாம்.. காங்கிரஸ், பாஜக கோரஸ்!
பெங்களூரு: கர்நாடகாவில் தொங்கு சட்டசபைக்கு சாத்தியமே இல்லை; பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம்; ஜேடிஎஸ் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என பாஜகவும் காங்கிரஸும் ஒரே குரலில் கூறி வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. கர்நாடகா தொடர்பான தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் கலவையானதாகவே வெளியாகி இருக்கின்றன. பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபைக்குதான் சாத்தியம் என்கின்றன. அதேநேரத்தில் பாஜக, காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறக் கூடும்; தனித்தே ஆட்சி அமைக்கலாம் என்கின்றன இக்கருத்து கணிப்புகள்.

இதனால் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்பதுதான் அக்கட்சியின் கனவு. முதல்வர் பதவி, பசையான துறைகள் என கடந்த காலங்களைப் போல கணக்குப் போட்டு இலவு காத்த கிளியாக காத்திருக்கிறது ஜேடிஎஸ்.
ஆனால் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையோ, பாஜக தனித்தே அதிக இடங்களில் வெல்லும். பாஜக முழுப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்க வைக்கும். ஆகையால் தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்.
இதேபோல கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரான டிகே சிவகுமாரும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 140க்கும் அதிகமான இடங்களை வெல்வது உறுதி. ஆகையால் காங்கிரஸ் தனித்துதான் ஆட்சி அமைக்கும். ஜேடிஎஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை என்கிற பேச்சுக்கே இப்போதைக்கே துளியும் இடம் கிடையாது. அப்படியான் ஒரு சிந்தனையே எங்களுக்கு இல்லை என அடித்துச் சொல்கிறார்.
என்னதான் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இத்தகைய வீராப்புகளை இப்போது காட்டினாலும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பார்களா? இல்லையே ஜேடிஎஸ் கட்சிக்கு முதல் ஆளாக அழைப்பு விடுப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்கின்றனர் கர்நாடகா மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications